பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
41

New Page 1
     செந்தமிழ் சேரநாட்டுக் கொடுந்தமிழ்
       
     செய்கின்றான் செய்குந்நான - செய்குநன்
     செய்கின்றது செய்குந்நது - செய்குநது
     செய்கின்ற செய்குந்ந - செய்குந

    ண ந ன என்னும் மூவெழுத்துள்ளும்,முதல்முதல் தோன்றியது நவ்வே. ரகரத்தின் வன்னிலையாகிய றகரம் தோன்றிய பின்பே, அதற்கினமான னகரம் தோன்றிற்று. இதனாலேயே, றனக்கள் நெடுங்கணக்கில் பமக்களின் பின் வைக்கப்பெறாது, இடையினத்தின்பின் இறுதியில் வைக்கப்பெற்றுள. முதற்காலத்தில்  தந்நகரமே றன்னகரத்திற்குப் பதிலாக வழங்கி  வந்ததென்பதற்கு, பொருந், வெரிந், பொருநை முதலிய சொற்களே போதிய சான்றாகும்.

    'செய்குந்நான்' என்னும் வடிவம், சற்றுப் பிற்காலத்தில் குகரம் நீங்கி, செய்யுந்நான்-செய்யுநன்-செய்நன் என முறையே திரிந்திருக்கின்றது. இங்ஙனமே, 'செய்குந்ந' என்னும் பெயரெச்சமும், செய்யுந்ந-செய்யுந-செயுந என முறையே    திரிந்திருக்கிறது.

    'செய்நன்' என்ற வாய்பாட்டு வடிவிலேயே, கீழ்க்காணும்  பெயர்கள் அமைந்துள்ளன.

     கொள்நன் - கொழுநன் = கணவன்1
     பொருநன் = போர் செய்கின்றவன்.    
     மகிழ்நன் - மகிணன் = இன்புறும் மருதநிலத் தலைவன்.
     வாழ்நன் - வாணன் = வசிக்கின்றவன்.

    வருநர், பாடுநர், இகழுநர், வாழ்நர், அறைநர், அடுநை(முன்னிலை யொருமை), விடுநை(மு.ஒ.) தகுந, வல்லுநர், களையுநர், பருகுநர் , கூறுநர், பொருநர், மலர்க்குநர், உடலுநர், நுவலுநர், முயலுநர், வருந, தப்புந, பேணுநர், மேம்படுந!(விளி),  கொய்யுநர், ஓம்புநன், அறியுநர், ஈகுநர், காமுறுநன், கொழுநன், வேண்டுநர், தொடக்குநர், செறிக்குநர், யாக்குநர், அறிநை(மு.ஒ.), வாணர் என்னும் புறநானூற்றுச் சொற்கள், 'செய்நன்' அல்லது 'செய்யுநன்' என்னும் வாய்பாட்டில் வந்த படர்க்கை முன்னிலை வினையாலணையும் பெயர்த்திரிபுகளாம். இத்தகைய சொற்களைப் பிற சங்க நூலினும் சங்க மருவிய நூலினும் பரக்கக் காணலாம். தொல்காப்பியத்திலேயே பல நூற்பாக்கள் இத்தகைய சொற்களைக் கொண்டுள்ளன. அவையாவன:

     இயல்பா குநவும் உறழா குநவும்என்று"

(தொல். 151)

   
     இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்  
     உறழா குநவும் என்மனார் புலவர்

(தொல். 158)


    1.  (கொள்கொம்பு என்பது கொழு கொம்பு என்று திரிந்திருத்தல் காண்க. கொள்நன் என்பது பற்றுகின்றவன் அல்லது கூடுகின்றவன் என்று பொருள்படுவது.)