பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
90

New Page 1
     மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ  
     .................................................  
     ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும்  
     ...........................................................  
     பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ  
     நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென  
     வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே''

(1259)

   
     நகையே அழுகை இளிவரல் மருட்கை  
     அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்  
     றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப''

(1198)

     வினைபயன் மெய்யுரு என்ற நான்கே  
     வகைபெற வந்த வுவமத் தோற்றம்''

(1222)

   
      விரவியும் வரூஉம் மரபின வென்ப''

(1223)

என்று சார்பிற் சார்புநூல் முறையில் தொல்காப்பியனாரும், கூறுவதால், தொல்காப்பியத்திற்கு முன்பே பற்பல முதல் நூல்களும் வழிநூல்களும் இருந்தமை பெறப்படும். வேறெம்மொழியிலும் இல்லாததும் மெய்ப் பொருளியல் அறிவு முதிர்ச்சியைக் காட்டுவதுமான பொருளிலக்கணம் கண்ட தமிழர், தமிழொலிகளைக் குறிக்கும் வரிவடிவுகளை அசோகன் கல்வெட்டெழுத்தினின்று அமைத்துக்கொண்டனர் எனக் கூறுவது எத்துணை ஏமாற்றும், அதை நம்புவது எத்துணை பேதைமையுமாகும் என்பதை அறிந்துகொள்க. கி.பி.13ஆம் நூற்றாண்டினரான பவணந்தியார்,

     தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்
     டெய்தும் எகர ஒகரமெய்ப் புள்ளி

என்று, தமிழெழுத்தின் (வரலாற்று முன்னைத்) தொன்மையைக் குறித்தார். 'ஆண்டு' என்றது அவருக்கு முற்பட்ட பண்டை நிலையை,

    இங்ஙனமிருப்பவும், உலகத்தமிழ்ப் பேரவையின் 2ஆம் கருத்தரங்கு மாநாட்டில், திரு. ஐராவதம் மகாதேவன் என்பார் தமிழெழுத்தை அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தோடு தொடர்புபடுத்தி முன்னது பின்னதினின்று தோன்றியதென்றும், அதன் பின்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டதென்றும், கை கூசாது வரைந்து அச்சிட்ட சுவடியைத் தமிழ்நாட்டுத் தலை நகரில் தமிழரசின் முன்பும் தலைமைப் பேராசிரியர் நடுவிலும், அஞ்சாது படித்திருக்கின்றார்.

    தமிழ்ப் பகைவர்கள், உலகில் முதன் முதல் தோன்றிய ஒப்புயர்வற்ற தமிழ் நெடுங்கணக்கை அசோகன் கல்வெட்டெழுத்தோடு தொடர்புபடுத்திக் கூறி வருகின்றனர். அசோகன் காலம் கி.மு. 272-231. தமிழெழுத்தின் தோற்றமோ வரலாற்றிற் கெட்டாத தொன்முது பழங் காலத்தது.