தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது - ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயு மிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கையாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும். தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண் ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார். கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார். (6) ‘ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்’ | (தொல். குற். 58) |
இதன் வழுநிலை முன்னர்க் கூறப்பட்டது. இந் நூற்பாவில், 'இயற்கைத் தென்ப' என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோரது என்பது புலனாகும். (7) “நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” | (தொல். புண. 30) |
“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால மொழிவயின் இயற்கை யாகும்” | (தொல். புண. 31) |
|