பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்161

படிமை என்னும் சொல், ஒன்றன் வடிவத்தைக் குறிக்கு மென்பது, முன்னர்க் காட்டப்பட்டது. நோன்பி(விரதி)கள் விதப்பான உடையும் அணியும் பூண்டிருப்பராதலின், அவரது வடிவம் அல்லது தோற்றம் சிறப்பாய்ப் படிமை யெனப்பட்டது 'விரதியரை வினாவல்' என்னுந் துறைபற்றிய திருக்கோவைச் செய்யுளில்,

“சுத்திய பொக்கணத் தென்பணிகட் டங்கஞ்சூழ் சடைவெண்
பொத்திய கோலத்தினீர்...”

(242)

என்று கூறியிருத்தல் காண்க.

பார்ப்பனர்க்கும் ஒரு படிமையுண்டென்பது, 'வேதி யரை வினவல்' என்னுந் துறைபற்றிய செய்யுளில் (243),

“வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
வதிரேய் மறையினிவ் வாறுசெல்வீர்....”

என்றும், பாலைக்கலியில் (8),

“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்”

என்றும் கூறியிருப்பதா லறியப்படும்.

படிமையுடையோன் படிமையோன். நோன்பைப் படிமை யென்றது ஆகுபெயர். படிமை என்னுஞ் சொல் படிமம் என்றும் நிற்கும். மம் என்பது பண்புப் பெயருக்கும் தொழிற்பெயருக்கும் பொதுவான ஓர் ஈறாகும். உருமம், கருமம், பருமம், (பருமன்), மருமம் என்னுஞ் சொற்களை நோக்குக.

படிமத்திற்கு (நோன்பிற்கு) உணவுமுறை வேறுபட்ட தாதலின், அது படிமவுண்டி யெனப்படும்.

“படிம வுண்டிப் பார்ப்பன மகனே”

(குறுந். 156:4)

என்று குறுந்தொகையில் வந்திருத்தல் காண்க.

இனி, உயிர்களின் அறுவகைப் பகுப்பைப்பற்றிச் சிறிது கூறுகின்றேன். உயிர்களை அறிவுபற்றி ஆறாகப் பகுப்பது