கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட்கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக் காட்டவேண்டுமென்று, கதிரவன் மறைவும் திங்கள் மறைவு மாகியவற்றைத் தம் திரிபுணர்ச்சியால் இருகோள்களாகக் கருதி அவற்றுக்கு ராகு கேது என்று பெயரிட்டு, அவற்றை எழுகோள்களோடு கூட்டி நவக்கிரக மென்றனர். புதன் சனி என்னும் இரு பெயர்கட்கும், பண்டைக் காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள் அறிவன் காரி என்பன. பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் வடமொழிப் பெயர்கட்குப் பதிலாக, பன்னீர் ஓரை(ராசி)யின் பெயர்களே மலையாள நாட்டிற்போலப் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் ஓரைப்பெயர்களில் மேடம், இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்னும் ஏழும் தமிழ்ச் சொற்களே. இவற்றுள் முதலாறுக்கு முறையே, தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்றும் பெயருண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில், முறையே, இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும். பன்னிரு மாதங்களும் ஓரைப்பெயர் பெறுமாறு 1. | சித்திரை | - | மேடம் | 2. | வைகாசி | - | இடபம் | 3. | ஆனி | - | இரட்டை | 4. | ஆடி | - | கடகம் | 5. | ஆவணி | - | ஆளி | 6. | புரட்டாசி | - | கன்னி | 7. | ஐப்பசி | - | துலை | 8. | கார்த்திகை | - | தேள் | 9. | மார்கழி | - | வில் | 10. | தை | - | மகரம் | 11. | மாசி | - | கும்பம் | 12. | பங்குனி | - | மீனம் |
மாதம் என்பது மதி என்பதினின்றும் பிறந்த தமிழ்ச் சொல்லே. மதி - மாதம் (த.) - மாஸம் (வ.) மதி = சந்திரன். காலத்தை மதிப்பதற்குக் கருவியாயிருப்பது மதி. மதித்தல் அளவிடுதல். ஒ.நோ : moon-month. மதி என்பதினின்று மாதம் என்னும் வடிவம் தோன்று மேயன்றி மாஸம் என்னும் வடிவந் தோன்றாது. த-ஸ, போலி. திங்கள் என்னும் சொல் ஒரு கிழமைப் பெயராதலின், மாதம் என்னும் சொல்லே மாதத்தைக் குறிப்பதாகும். ஒரு
|