நட்புப்பேறு (சுகிர்லாபம்) என்னும் வலக்காரத்தைப் பற்றிய கதைகளுள், 'புலியும் பிராமணனும்' என்பது ஒன்று. பிராமணன் புலியின் பொற்காப்பிற்கு அவாக்கொண்டு, அதனிடம் சென்றான்; தான் அதனால் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தபோது, 'நம்முடைய சாதிக்கு இயல்பாயிருக்கிற பேராசையினால், இந்தத் துஷ்டனிடத்தில் விசுவாசம் வைத்து மோசம் போனேன்' என்று சொல்லி வருந்தினதாக அதிற் கூறப்பட்டுள்ளது. சீவகசிந்தாமணியின் 400ஆம் செய்யுளில், “அந்தணர் தொழிலே னானேன்” என்று அந்தணர்க்குச் சால்வு (திருப்தி) தொழிலாகக் கூறியது முனிவரை நோக்கியென்க. (5) ஒளவையார் சோழன் ஒருமுறை ஒளவையாரை நோக்கி எக்குலத் தானை அமைச்சனாகக் கொள்ளலாம் என்று வினவ, அவர், “நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு” என்று கூறினதாகத் தனிப்பாடற் றிரட்டில் உள்ளது. “காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடு ஊர்கெட நூலைவிடு...” என்பது பழமொழி. “சாதி யிரண் டொழிய வேறில்லை...... இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்...” என்ற நல்வழி வெண்பாவும் ஆரியக்குல முறையை மறுத்த தாகக் கொள்ளலாம். (6) அதிவீரராம பாண்டியன் “எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார்”
|