முதனூல்களினின்றும் கருத்தில் வேறுபட்டதுமன்றி, அவற்றுக்கு மிக முந்தியவுமாகும் என்பதை அவர் அறிந்திலர். பரிமேலழகர், தென்புலத்தாரைப் “படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி” என்றார். தென் புலத்தார் (பிதிர்க்கள்) தத்தம் காலத்தில் உலகில் வாழ்ந்து இறந்துபோனவராயிருக்க, அவரைப் படைப்புக் காலத்துப் படைக்கப்பட்டவர் என்று கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்? இதன் பிழைபாடும், இன்னோரன்ன பிறவும் பின்னர்க் காட்டப்படும். வடநூலைப் பின்பற்றிச் சேனா வரையர், சிவஞான முனிவர், சங்கர நமச்சியவாயப் புலவர், சுவாமிநாத தேசிகர் முதலிய தனித்தமிழருங்கூடப் பல இலக்கணங்களில் தவறி விட்டனர். இவற்றையெல்லாம் எனது தொல்காப்பியவுரையிற் கண்டு கொள்க. திருவையாற்றுக் கீழைக் கலைக்கல்லூரித் தலைவ ராகிய, பண்டாரகர் சுப்பிரமணிய சாத்திரியார், சில ஆண்டு களாகத் தமிழுக்கு மாறான சில நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டு வருகின்றார். அவற்றுள், 'தமிழ்மொழி நூல்' என்பது ஒன்று. அதில், ஆராய் என்னுஞ் சொல்லில் 'ர்' செருகல் (intrusion) என்று கூறியுள்ளார். ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive). ஆர (நிரம்ப) + ஆய் = ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க. இன்னும், தொல்காப்பிய நூன்மரபில், “லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்” | (24) |
“ணனஃகான் முன்னர்க் க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய” | (26) |
“ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே” | (27) |
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்” | (28) |
என்னும் நூற்பாக்களைப் பிறழவுணர்ந்து பண்டைத் தமிழ்ச் சொற்களினிடையில், ல்ய, ல்வ, ள்ய, ள்வ, ண்ய, ண்வ, ன்ய, ன்வ, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம்வ என்னும் இணைமெய்கள் பயின்றதாகக்
|