|
மங்கிவிட்டதினாலும், எல்லாச் சொற்களும் வேர்ப்பொருளுடன்
குறிக்கப்பட்ட அகராதிகள் பண்டைக் காலத்தில் தோன்றாமையாலும்,
“மொழிப்பொருட் காரணம் விழிப்பத்
தோன்றா” (தொல். 877)
என்றார் தொல்காப்பியர்.
"விழிப்பத் தோன்றா" என்பது தெளிவாய்த் தோன்றாது
என்று பொருள்படுமேயன்றி, தோன்றவே தோன்றாது என்று
பொருள்படாது. “நால்வகைச் சொல்லுக்கும் பொருளை
அறிவித்து நிற்கின்றதோர் காரணம் உண்டாந்தன்மை,
நுண்ணுணர்வில்லாதோர்க்கு மரபென்று கொள்வதல்லது
விளங்கத் தோன்றா என்றவாறு. எனவே, நுண்ணுணர்வுடையோர்க்குக்
காரணமுண்டாந்தன்மை விளங்கத் தோன்று மென்பது
பொருளாயிற்று" என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல்
காண்க. இங்ஙனம் தெள்ளிய நூற்பாவுக்குத் தெள்ளுரை
கூறியிருந்தும், வினையின் பொருளை வேறுபடுத்துவதே
வினையெச்சத்தின் பயன் என்பதையும் நோக்காது,
ஆராய்ச்சிமிக்க இவ் விருபதாம் நூற்றாண்டில்,
அதுவும் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் (Lexicon),
"Tolkappiyar only says that the origin of words is beyond
ascertainment" என்று பதிப்பாசிரியர்
கூறியிருப்பது மிகமிக இரங்கத்தக்கது. உண்மையில்
சொற்பிறப்பியல் (Etymology)என
ஒன்றிருக்குமாயின், அதற்குத் தமிழ்தான் சிறப்பாய்
இடந்தரும்.
5. தமிழில் நெடில் முன்னர்த் தோன்றியமை
தமிழில் நெடில் முன்னும் குறில் பின்னுமாகத்
தோன்றியதாகத் தெரிகின்றது. அதற்குச் சான்றுகளாவன:
(1) குழந்தை வாய்க்குக் குறிலினும் நெடிலே
ஒலித்தற் கெளிதா யிருத்தல்.
முந்தியல் (primitive)
தமிழன் குழந்தை போன்றவன். ஆதலால், நெடில் ஒலிகளே
முதலாவது அவன் வாயில் தோன்றியிருக்கலாம்.
(2) தொல்காப்பியத்தில் குறில்கள்
ஓரெழுத்துச் சொற்களாகக் கூறப்படாமை.
"நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி"
(43)
"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"
(44)
"ஆஓ ஏஅம் மூன்றும் வினாஅ" (32)
எனத் தொல்காப்பியத்திற் கூறியிருத்தலின்,
நெடில்களே ஓரெழுத்துச் சொற்களாய் முதன்முதல் வழங்கினமை
புலனாம். இனி,"அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு" (31),
"அப்பா லேழும்" (4), "எச்சொல் லாயினும்"
(781), "நீட வருதல் செய்யுளில் உரித்தே" (208)
என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், முதற்
புறச்சுட்டும் வினாவும் தொல்காப்பியர் காலத்திற்கு
முன்பே குறுகிவிட்டன என்பதும், நெடுஞ்சுட்டு உலகவழக்கற்றதினால்
செய்யுள் வழக்கில்மட்டும் இடம்பெற்றதென்றும்
அறியப்படும்.
"ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்"
(814)
|