பக்கம் எண் :

10செந்தமிழ்க் காஞ்சி

7

7. பழந்தமிழ்நாடு

'பச்சைமலை பவளமலை' என்ற மெட்டு

   1. குட்டமலை குமரிமலை எங்கள்மலை நாடு
  கொடியபெருந் தென்கடலே கொண்டதெங்கள் நாடு
  பொற்றைமலை பொதியமலை எங்கள்மலை நாடு
  புகலரிய பழைமையுள்ள தெங்கள்மலை நாடு.
   
   2. தென்கடலில் எழுநூற்றுக் காதமெங்கள் நாடு
  தேய்பிறைபோல் பலமுறையாய்த் திரைபுகுந்த நாடு
  இன்குமரி பஃறுளிக்கே இடையிலுள்ள நாடு
  இலமூரியா என்றுபெய ரிட்டதெங்கள் நாடு.
   
   3. ஆளியன்னம் நீர்நாயென் றரியவுயிர் நாடு
  ஐந்திணையாய் எமதுமுன்னோர் அமர்ந்திருந்த நாடு
  வீளியர்போல் குலங்களெல்லாம் வீரங்கொண்ட நாடு
  வேற்றரசர் வரவிடாமல் வெற்றிபெற்ற நாடு.
   
   4. வடமொழியே கலவாமல் வளர்ந்ததமிழ் நாடு
  வளமாகத் திராவிடரே வாழ்ந்துவந்த நாடு
  திடமுடன் ஒற்றுமையாய்த் திகழ்ந்ததெங்கள் நாடு
  தேவரையும் வசிகரித்த திருமிகுந்த நாடு.
   
   5. முத்தமிழும் பயின்றிருந்த மூதறிஞர் நாடு
  மூடருடன் பேதைமதி கேடரில்லா நாடு
  வித்தைகலை கைத்தொழில்கள் விஞ்சியுள்ள நாடு
  வேறுபடா தூண்மணத்தில் விரவிவாழ்ந்த நாடு.
   
   6. நீர்நிலத்து வாணிகம் நிகழ்ந்ததெங்கள் நாடு
  நெடுந்தூரத் தரசருடன் நேயமுற்ற நாடு
  பார்நிலத்து நாகரிகப் பைந்தமிழ் நாடு
  பலமான சேரசோழ பாண்டியநன் னாடு.