பக்கம் எண் :

84மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பிள்ளைப் பருவத்திலும் பையற் பருவத்திலும் கல்விகற்கும் வாய்ப்பில்லாதவர்க் கெல்லாம், பிற்காலத்தில் அகவை வரம்பிடாது கல்வி கற்பித்தல் வேண்டும்.

  துவக்கக்கல்வியுமின்றித் தொழில் மேற்கொண்டவர்க்கும், மேற்கல்வியின்றி வேலை பெற்றவர்க்கும், மாலைப்பள்ளியும் கல்லூரியும் வைத்து வேண்டிய கல்வி கற்பித்துத் தகுதித்தாளும் பட்டமும் அளித்தல் வேண்டும்.

  இயன்ற அளவு பல்கலைக்கழகங்களில் அஞ்சல்வாயிற் கல்விக்கும்
(Correspondence Course) ஏற்பாடு செய்தல் வேண்டும்.

  ஆங்கிலப் பட்டத் தேர்வெழுத ஆசிரியர்க்களிக்கும் சிறப்புச் சலுகையைப் பிறர்க்கும் அளிக்கலாம்.

  சிறப்புத் தகுதியுள்ளவர்க்கெல்லாம் ஒரு தேர்வின் முதனிலையையும் இறுதிநிலையையும், ஆண்டிடையீடின்றி அடுத்தடுத்தோ ஒரே சமையத்திலோ வெழுத இசைவு தரலாம். எல்லா வகையிலும் இயன்றவரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, கல்வியைப் பரப்புவதையே முதன்மையாகக் கருதல் வேண்டும்.


5. வேலையளிப்பு


  கலைக்கல்லூரி, தொழிற்கல்லூரி, பயிற்சிக்கல்லூரி ஆகிய மூவகைக் கல்லூரிகளிலும் பயின்று பட்டம்பெற்ற இளைஞர் வேலை வேண்டும்போது, குலமத கட்சிச் சார்பின்றித் தகுதிபற்றியே வேலையளித்தல் வேண்டும். எல்லா வேலைகட்குமுரிய தகுதி வகைகள்: 1. உடம்பியல்
(Physical), 2. மனவியல் (Mental), 3. மதியியல் (Intellectual) , 4. ஒழுக்கவியல் (Moral), 5.ஆவியியல் (Spiritual) 6.கல்வியியல் (Academical) , 7. பயிற்சியியல் (Practical), 8. பரிந்துரையியல் (Recommendatory) என மொத்தம் எட்டாம். இவையெல்லாம் எல்லா வேலைக்கும் உரியனவல்ல. ஆவியியல் என்பது மதவியற் பணிக்கேயுரியது. பரிந்துரை யென்பது ஏனை வகைகள்போல் வலிமையுள்ளதன்று; இன்றியமையாததுமன்று. மறைமலையடிகள், மேனாட் குடியரசுத் தலைவர் பர். இராதாகிருட்டிணனார் போன்றார் பரிந்துரையாயின், மறுக்கொணா மாவலிமையுள்ளதாம்.

  இவ் வெண்வகையுட் சிலபலவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு வேலைக்குமுள்ள தகுதிகள் பலவாகும்.

  தேர்வு தேறியமட்டில் ஒருவர் ஒரு வேலைக்குத் தகுதியுள்ளவராகார். ஒவ்வொரு பணிக்கும் அதற்குரிய கல்வியும்