2. பண்டைத் தமிழகம் அழிந்துபோன தமிழ்நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைந்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொன்னூல்களிற் கூறப் படுகின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. அகத்தியருக்கு முந்திய தமிழ்நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது. தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட “எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன” வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட “கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையகவலுமென இத் தொடக்கத்தனவும்” கடைக்கழகத் தாராற் பாடப்பட்ட “பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும்” இப் போதில்லை. தலைக்கழகக்காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக்கழகத் திலக்கணமாகிய மாபுராணமும் இசைநூலும் பூத புராணமும் இப்போதில்லை. இனி, அடிநூல், அணியியல், அவிநயம், அவிநந்த மாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந் திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல்,
|