“ தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே” | (புள்ளி. 74) |
என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது. அஃது பஃது என்று தகரம் றகரமாகத் திரியாத வடிவம் முந்தியாகவும், அஃறிணை பஃறெடை என்று தகரம் றகர மாகத் திரிந்த வடிவம் பிந்தியதாகவும் தெரிகின்றது. நூறு : நூறு = பொடி. பொடி எண்ண முடியாதபடி மிக்கிருத்தலின், அஃது ஒரு பேரெண்ணுக்குப் பெயராயிற்று. ஆயிரம் : அயிர் - அயிரம் - ஆயிரம். அயிர் = நுண்மணல். நூறு என்பதற்குக் கூறியதே ஆயிரம் என்பதற்கும். இலக்கம் : இலக்கம் = எழுத்து, எண்குறி, எண். இலக்கம் என்பது பேரெண் என்னும் கருத்தில் நூறாயிரத்தைக் குறிக்கும், எடை தூக்கு நிறை என்னும் எடுத்தலளவைப் பொதுப் பெயர்களே ஒவ்வோர் அளவைக் குறித்தல்போல. கோடி : கோடி = கடைசி. கடைகோடி, தெருக்கோடி என்னும் வழக்குகளைக் காண்க. கடையெண் என்னுங் கருத்தில், கோடியென்னும் பெயர் நூறிலக்கத்தைக் குறிக்கும். இலக்கம் கோடி என்னும் எண்ணுப்பெயர்கள் மிகப் பிந்தியவை. தமிழர் கணிதத்தில் சிறந்தவரா யிருந்ததினாலும், மேனாடுகளில் இலக்கத்திற்கு வழங்கு பெயரின் வடிவம் (lakh) தமிழ்ப்பெயர் வடிவத்தை ஒத்திருப்பதாலும், இலக்கத் தீவுகள் (Laccadive Is.) என்னும் பெயர் ஆங்கிலத்திலும் திரியாது வழங்குவதாலும், இலக்கம் கோடி என்னும் பெயர்கட்குத் தமிழிற் பொருத்தமான பொருளுண்மையாலும், 'மதியாதார் தலைவாசல்.... மிதியாமை கோடி பெறும்', 'கோடியுந் தேடிக் கொடிமரமும் நட்டி', 'காணியாசை கோடி கேடு' என்று பழைமையான வழக்குகளுண்மையாலும், இலக்கம் கோடி என்னுஞ் சொற்களை வட சொற்கள் என்பதினும் தென்சொற்கள் என்பதே பொருத்தமுடைத்தென்க.
|