8ஆம் வேற்றுமையுருபு பெயரின் விளித்தற்கேற்றதிரிபே. அது பெரும்பாலும் ஈற்று நீட்டம். அது சேய்மையும் உயரமுங் குறிக்கும். ஆ ஏ ஓ என்னும் நெடில்கள் சேர்வதாலும், ஈற்றில் அல்லது ஈற்றயலிலுள்ள குறில்கள் நீளுவதாலும் உண்டாகும். கா : மகனே, தேவீ, அண்ணா. விளிவேற்றுமை இரக்கக் குறிப்பும் வியப்புக் குறிப்பும் பற்றிய சில சொற்களைப் பிறப்பித்திருக்கின்றது. கா : ஐயோ, ஐயவோ, ஐயகோ, அன்னோ - இரக்கக் குறிப்பு. அம்ம, அம்மா, அப்பா - வியப்புக்குறிப்பு. வினைச்சொல் ஒப்பியல் தரங்கள் (Degrees of comparison) ஒப்புத்தரம் (positive), உறழ்தரம் (comparative), உயர்தரம் (superlative) என மூவகைப்படும். அவற்றுள் ஒப்புத்தரம் 2ஆம் வேற்றுமையுருபுடன் விட (நீக்க), பார்க்க (காண), பார்க்கிலும் (பார்த்தாலும்), காட்டின் (காட்டினால்), காட்டிலும் (காட்டினாலும்) முதலிய சொற்கள் சேர்வதாலுணர்த்தப்படும். பிற வெளிப்படை. வினை என்னுஞ் சொல் விளை என்பதன் திரிபாகத் தெரிகின்றது. முதற் பெருந்தொழில் உழவு. வினைஞர் = மருத நிலத்தார், உழவர். விளைஞர் - வினைஞர். வினைக் களம் = போர்க்களம். போர்க்களம் என்னும் பெயர் ஏர்க் களம், பொருகளம் என்னும் இரண்டிற்கும் பொது. விளை - வினை. ஒ.நோ: வளை - வனை. வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். எச்சம், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும். இவை பெயராகிய எச்சத்தையுடையது வினையாகிய எச்சத்தையுடையது என்னும் பொருளன. முதன்முதல் வினைச்சொற்கள் இறந்தகாலமும் எதிர் காலமுமாகிய இரண்டுகாலமே காட்டின. இறந்தகால வினை முற்றுகள் இப்போதுள்ள எச்சவடிவாகவேயிருந்தன. செய்யும் என்னும்
|