பின்னிணைப்பு II அர் என்னும் வேர்ச்சொல் அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல். அர - அரா - அரவு - அர வம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல்2 நுண்ணிதாயொலித்தல். கா: அரிக்குரற்பேடை. அரித்தல்3 அறுத்தல். கா : அரிவாள்மணை (அரி) - (அரம்) - அரங்கு. அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு - அரங்கம். அரங்கு - அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரித்தல்4 வெட்டுதல். கா : கோடரி (கோடு + அரி) = மரக்கிளையை வெட்டுங்கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. அரித்தல்5 அராவுதல். அரி + அம் = அரம் - அரவு - அராவு. அரித்தல்6 அராவுதல் போல உடம்பிலுண் டாகும் நமச்சல். அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல்7 அரிப்பெடுக்கும்போது சொறிதல் போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அரிசிப்பல். சிறிய நெல்லி அரிநெல்லி. அரி = நுண்மை, அழகு. அரித்தல்8 அழித்தல். அரி = பகைவன், சிங்கம், அரசன், தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம். அரி = அழிப்பவன், அழிப்பது. கா : முராரி, ஜ்வரஹரி (வ.) அரி - ஹரி (வ.). அரி - அம் = அரம் = அழிவு, துன்பம்; E - Ger. harm. அரம் - அரந்தை. அரி + அன் = அரன் = அழிப்பவன், தேவன், சிவன். இனி அரம் = சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன்முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரணம். அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அர மகளிர் = தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. “ சூரர மகளிரோடுற்ற சூளே” என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது. (அரம்) - (அரம்பு) - அரம்பை = தேவமகள் ரம்பா (வ.). அரன் - ஹரன் (வ.). அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா - அரோவரா - அரோகரா. அரம். மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religiosa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளையுடையதாய்ப் பூவோடு கூடியது பூவரசு.
|