பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 23

செந்தமிழ்நாடு

செந்தமிழ் நிலத்தை “வைகையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கு மாம்” என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் முதலியோர் உரைத்தனர்.

செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயா யிருத்தலின், இவ் வுரை பொருந்தாது.

“செந்தமிழ் நாடாவது: வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமை யானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாத லானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு :

“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி”

என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடு களையொழித்து, வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென் றுரைப்ப” என்றுரைத்தார் தெய்வச் சிலையார்.

இவ் வுரையே சிறந்ததாகும். செந்தமிழ் நிலம்,

“சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப”

என்பது பிற்காலத்திற் கேற்றதாகும்.

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

(தொல். எச்ச. 4)