பக்கம் எண் :

36ஒப்பியன் மொழிநூல்

புலனெறி வழக்கம் எனப்படும். அதாவது, உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னாததுங் கலந்து உள்ளதாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும்.

குறிஞ்சிநாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவ தன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்ஙனமே பிறவும்.

பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்). இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள்; ஏனைய பூப்பெயர்கள்.

பாலை என்பது பிறநாட்டிலுள்ளதுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.

“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
றானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”

(சிலப். 11 : 12-16)

என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. பாலையின் முது வேனிற்கால நிலையே, பிரிவிற்குரியதாக அகப்பொருட் செய்யுள்களிற் கூறப்படும்.

மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்துபோனது, குறிஞ்சியினின்று போவதும், அயல்நாட்டினின்று வந்து குடிபுகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள், முன்னது மக்கட்பெருக்கால் படிப்படியாய் நிகழ்வது; பின்னது தெரிந்து கோடலால் ஒரே சமையத்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்க.