பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 39

அரசியல்

மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப்பிருப்பதும், நிலையில்லாத இடத்தில் அவையில்லா திருப்பதும் இயல்பு. மருதநிலத்தில் மாந்தர் நிலையாயிருந்தமையின், ஆட்பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின.

குடிகளை ஒரு மந்தைபோன்றும் அரசனை அதன் மேய்ப்பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட்டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமைபற்றிச் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம்.

கோ = பசு. கோ + அன் = கோவன் - கோன் - கோ(ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெருவழக்காக வழங்குகின்றது.

Swed. - Dan. ko, Du. koe, Skt. go, Ger. Kuh, Ice. Kyr, Irish - Gael. bo, L. bos, Gk. bous.

கோ என்னுஞ் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச்சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ, பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப்பொருளில் வழக்கற்ற தென்க.

கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ.நோ: யாவர் - யார்.

கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடையனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும்.

“கோவனிரை மீட்டனன்” (சீவக. 455) என்பதில் இடையனையும், “ கோவனும் மக்களும்” (சீவக. 1843) என்பதில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது.

கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயர்கள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும்