பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு இன்றுவரை யுள்ளது. (4) நடுகல் தெய்வம் “காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தரு மரபிற் பெரும்படை வாழ்த்தல்” | (புறத். 5) |
என்பது தொல்காப்பியம். மதுரைவீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே. (5) கற்புத் தெய்வம் கண்ணகி வரலாறு காண்க. (6) தென்புலத்தார் வணக்கம் - (Ancestor Worship) பண்டைத் தமிழர், இறந்துபோன தம் முன்னோரைத் தென்புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும் போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவுகூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீனநாட்டில் மிகுதியாக வுள்ளது. “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை” | (குறள். 43) |
என்றார் திருவள்ளுவர். (7) நிலா வணக்கம் நிலாவும் ஒரு காலத்தில் வணங்கப்பட்டதைப் 'பிறை தொழு கென்றல்' என்னுங் கோவைத்துறையா லறியலாம். நால்வேள்வி வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல். விருப்பத் தோடு பிறரையுண்பிப்பது வேள்வி. “இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன்” | (குறள். 87) |
என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வி யென்றமை காண்க.
|