ஓ - ஓம் - ஓம்பு. ஒ.நோ: ஏ - ஏம் - ஏம்பு. ஆ - அ - அம் - அம்பு - அம்பர். கும் - கும்பு. திரும்-திரும்பு. ஓம் = காப்பு. ஓம் + படு = ஓம்படு. ஓம்படு + ஐ = ஓம்படை = பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல். ஓம்படுத் துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயுமுள்ளது. ஓம்படுதல் தன்வினை. ஓம்படுத்தல் பிறவினை. வழிப்படுத் துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக. மதம்பற்றிய சில பொதுச்சொற்கள் மாயை மாய் + ஐ = மாயை. ஒ.நோ: சாய் + ஐ = சாயை = நிழல். மாய் + அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. 'மாயமாய்க் காணோம்', மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச் சொற்களை மாயா சாயா என்று ஆகார வீறாக்கின வளவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற் கிடமானதே. மதந்தழுவிய சில கருத்துகள் வீடு ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப்போல, வெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற்குரியதுமானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர். விடு - வீ = (பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை, துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம். ஏழுலகம் பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங் களாயிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி, எழுகோள்களினின்றும் ஏழுலக வுணர்ச்சியுண்டானதாகவுங் கொள்ளலாம். ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.
|