இதில் “கொடிநிலை கந்தழி வள்ளி” என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராக வையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது 'அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன' என்பது. “முதலன மூன்றும்” என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், “வடுநீங்கு சிறப்பின்” என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், “கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்ந்துவருமென்றும் பொருள் படுவதாலும், “முதலன மூன்றும்” என்ற சுட்டு, “அமரர்கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன்றையும் தழுவ முடியாமையானும், “கொடிநிலை கந்தழி வள்ளி” என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் “அமரர்கண் முடியும் அறுவகை” யில் மூன்றாயமைதலானும், இதற்குச் சிறந்த பழந்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டாயிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லையென்க. “கடவுள் வாழ்த்து” என்னும் பெயரும், அதன்பின் “கொடி நிலை கந்தழி வள்ளி” என்ற முறையும், திருக்குறட் பாயிரத்தில் அமைந்திருப்பதை நோக்குக. இது மதிநுட்பத்தாலறியும் பொதுச்செய்தியாதலின், பார்ப்பார் தமிழ் மொழிக்கதிகாரியாகார் என்று யான் முற் கூறியதற்கு முரணாகாதென்க. தமிழுக்கு இதுபோது தொண்டுசெய்து வருவாருள், தலைமையானவருள் ஒருவர் மு. இராகவையங்கார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூல்களுள், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்பவை மிக மிகப் போற்றற்குரியன. நூல்களை உள்ளபடி அச்சிடுவதினும் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது சிறந்தது. ஐயங்கார் அவர்கள் நூல்களில் உள்ள சில தமிழொடு முரண் கருத்துகட்கு, முன்னோரான பார்ப்பாரும் தமிழருமே காரணராவர்.
|