பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 43

வழிபாடு - Cults

ஐந்திணைத் தெய்வம்

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

(அகத். 5)

என்பது தொல்காப்பியம்.

முல்லைத்தெய்வம் மாயோன்

மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரி யோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.

முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்.

குறிஞ்சித்தெய்வம் சேயோன்

சேயோன் = சிவந்தவன். சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒருபொருட் சொற்கள். குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்டதினாலும், தீ அஞ்சத்தக்கதானதினாலும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு, அதற்குச் சேயோன் என்று பெயரிட்டார்கள்.

சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தியாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர்.