|
ச
சில சிறு தெய்வ வழுத்துகளை மட்டும்
கொண்டு, இந்தியாவிற் புகுந்த காலம் கி.மு. தோரா. 1500. அவர் சிறுபான்மையராயிருந்ததனால்,
பழங்குடித் திரவிட மக்களொடு கலந்துபோயினர். அவர் மொழி வழக்கற்றது. அதனால் தாம் புகுந்த
நாட்டுமொழியையே தாய்மொழியாகக் கொண்டனர். அவருடைய பூசாரியர் மட்டும் தம்மை ஆரியர் என்று
கூறிக்கொண்டு தம் முன்னோர் மொழியும் பிராகிருதம் என்னும் பழங்குடி மக்கள் மொழியுங் கலந்த
வேத மொழியிற் பல சிறுதெய்வ வழுத்துகளையும் பாடி வந்தனர். அப் பாடற்றிரட்டே இருக்குவேதம்
என்னும் முதல் ஆரிய இலக்கியம். தமிழரொடு தொடர்புகொண்டு அவர் நாகரிகத் தலைமையைக் கண்ட
ஆரியப் பூசாரியர், காளி வணக்கத்தையும் முருக வழிபாட்டையுங் கைக்கொண்டு, பின்னர்ச் சிவமதம்,
திருமால்மதம் ஆகிய இரு பெருந் தமிழ மதங்களையும் மேற்கொண்டு, முத்திருமேனிக் கொள்கை
வாயிலாக அவற்றை ஆரிய வண்ணமாக்கி இந்துமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர். இந்துமதம் என்று
ஒரு தனி மதமில்லை. ஆரியரின் சிறுதெய்வ வேள்வி வழிபாடும் தமிழரின் இருபெரு மதங்களும் கலந்த
கலவையே இந்துமதம். சிவனையும் திருமாலையும் தனித்தனி முத்தொழில் தலைவராகக் கொள்ளும் தமிழ்
மதங்களும், தனித்தனி ஒரு தொழில் தலைவனாகக் கொள்ளும் முத்திருமேனிக் கொள்கையும் முரண்பட்டனவாகும்.
ஆதலால், இது தமிழர்க்கு உடன்பாடன்று. இதன் விளக்கத்தை என் "தமிழர் மதம்" என்னும் நூலிற்
காண்க.
ஆரியப் பூசாரியர் தம் வெண்ணிறத்தால்
தம்மை நிலத்தேவரென்றும், தம் முன்னோர் மொழியின் எடுப்பொலியால் அதைத் தேவமொழி யென்றும்,
மூவேந்தரையும் ஏமாற்றிவிட்டனர். அவரும், தம் பழங்குடிப் பேதைமையாலும் மதப் பித்தத்தாலும்
கொடைமடத்தாலும் ஏமாறிக் கெட்டனர்.
அவ் வேமாற்றை, அவர் வழியினர்,
அறிவும் ஆராய்ச்சியும், மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தொடர முயல்கின்றனர். இது வீட்டார்
தூங்கும்போது திருடிய திருடன், அவர் எழுந்த பின்பும் திருடக் கருதுவது போன்றதே.
நான் 1943ஆம் ஆண்டு சென்னை முத்தியாலுப்பேட்டை
உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியனாக இருந்தபோது, அப் பள்ளித் தலைமையாசிரியர்
ஞா. இலக்குமணசாமி செட்டியார் என்னிடம், "ஐயா, பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார்
எனக்குக் கிறித்தவக் கல்லூரியிற் கலையிளைஞன்
(B.A.) வகுப்பில் தமிழ் கற்பித்த போது,
பிராமண மாணவரையும் வைத்துக் கொண்டு பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டனர் என்று சொன்னாரையா!"
என்று கூறியது, இன்றும் இன்று சொன்னது போன்றே யிருக்கின்றது.
|