|
இ
இசைக்கல்விக்கும், தெய்வப்பத்தியும்
தூயவொழுக்கமும் மறைநூல் விருப்பும் உள்ளவரை மதவியற் கல்விக்கும், இவ்வாறே பிற துறைகட்கும் தெரிந்தெடுத்தல்
வேண்டும்.
கல்லூரிகளில் இடமில்லாவிடின்,
புதுக்கல்லூரிகளைத் தோற்று வித்தல் வேண்டும். காரைக் கட்டடம் இல்லாவிடின் கூரைக் கட்டடத்தி
லேனும் தொடங்குதல் வேண்டும்.
கணிதம் வேண்டியவனை வரலாற்று
வகுப்பிலும், மருத்துவப் பயிற்சி விரும்புபவனைச் சட்டக் கல்லூரியிலும், இங்ஙனமே ஏனைத் துறைகளிலும்
தாறுமாறாகச் சேர்ப்பது, வண்டியிற் கட்டவேண்டிய காளையை வீட்டுக் காவற்கும், வீட்டுக் காவற்குரிய
நாயை இறைவையேற்றத்திற்கும், பொதி சுமக்க வேண்டிய கழுதையை ஊர்வலத்திற்கும், ஊர்வலத்திற்குரிய
யானையை நரகல் வண்டிக்கும், வைப்பதும் கட்டுவதும் அமர்த்துவதும் போன்றதே.
தொழிற்பயிற்சியாயினும் மேற்கல்விப்
பயிற்சியாயினும், பயிற்சி பெற்ற எல்லாரும் வேலைக்குரியர். பலருக்கு வேலையில்லை யென்று கைவிரிப்பது
பொறுப்பாட்சியன்று. மக்கள்தொகை மிக்கிருப்பின், அதைப் பல்வேறு வழிகளில் மட்டுப்படுத்தலாம்.
ஆயின்,
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து
கெடுக உலகியற்றி யான்"
(குறள்.
1062)
என்று திருவள்ளுவர் இறைவன் மீதே
வசை பாடியிருத்தலை நோக்குக.
மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிய
இக்காலத்தில், தனியுடைமை யாட்சிக்கு இடமின்றேல், அளவுடைமை யாட்சியும், அதுவும் போதா தெனின்
கூட்டுடைமை யாட்சியும், இன்றியமையாதனவாம். ஒரு நாட்டிற் பிறந்து வேலைப் பயிற்சி பெற்ற எல்லார்க்கும்
குலமதக் கட்சி வேறு பாடின்றித் திறமைக்கேற்றவாறு வேலையளிப்பதே கூட்டுடைமையாட்சியாம். அதுவே
இரசியாவிலும் சீனாவிலும் இன்று இருந்துவருவது. அதைப் பொதுவுடைமையாட்சியென்பது தவறு.
பொதுவுடைமையாட்சி பணமின்றிக் குடும்ப வாழ்க்கைபோல் நடப்பது. அது ஒரு நாட்டிற்கு ஏற்காது.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"
(குறள். 302)
என்று அக்காலத்திலேயே திருவள்ளுவர்
கூறியிருத்தல் காண்க.
அளவுடைமையாட்சி யெனினும் வரம்புடைமையாட்சி
யெனினும் ஒக்கும்.
இனி, குருடர் முடவர் முதலியோர்
ஐயம் (பிச்சை) பெறுவதும், வறிய நாடுகள் செல்வ நாடுகளினின்று உதவி பெறுவதும் வாழ்வுரிமையின்பாற்
படுவதே,
|