|
வழங
வழங்கும்போது, செந்தமிழ் நாட்டில்
வழங்காத புதுச் சொற்கள் கொடுந்தமிழ் நாட்டில் வழங்குவது வியப்பன்று. பையானி(மலையாளம்),
அல்லுண்டு (தெலுங்கு), கொக்கு(துளு) என்பன இத்தகைய.
(பையானி = ஒருவகை நச்சுப் பாம்பு, அல்லுண்டு = மருமகன்,
கொக்கு = மாமரம்.)
தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களில் சில, தமிழ்நாட்டில்
வழக்கற்றுப் போயினும், கொடுந்தமிழ் நாடுகளில் வழக்கறாதுள்ளன. அஃதாவது, தமிழ்நாட்டு இலக்கிய
வழக்குச் சொற்கள் சில கொடுந்தமிழ் நாட்டு உலகவழக்கில் உள்ளன.
எ-டு:
| |
தமிழ் |
தெலுங்கு |
| |
வெதிர்
|
வெதுரு |
| |
சால
|
த்சாலா |
| |
பணி
|
பனி |
| |
நெய்த்தோர் |
நெத்துரு |
இங்ஙனம் ஒலித்திரிபு, சொற்றிரிபு, பொருட்டிரிபு, திசைச்சொல்,
இலக்கியச் சொல்வழக்கு ஆகிய ஐவகை இயல்பே செந்தமிழைக் கொடுந்தமிழாக்குகின்றன. இவற்றொடு
வடமொழிக் கலப்பும் சேரின், கொடுந்தமிழ் திரவிடமாகத் திரிகின்றது. சேரநாட்டுச் செந்தமிழ்
கொடுந் தமிழாகிப் பின்பு மலையாளமாய்த் திரிந்துள்ளமை காண்க.
இதுகாறும் கூறியது மொழித்திறமே. இலக்கண விலக்கியத்திறம்
நோக்கின், தமிழுக்குள்ள தனிப்பட்ட தொன்முது இலக்கண விலக்கியம் கொடுந்தமிழுக்கில்லை.
அவற்றுக்குள்ளன வெல்லாம் பிற்காலத்தனவும் ஆரியத்திற் குரியனவுமே. இதனால், மொழிநிலையால்
மட்டுமன்றி இலக்கிய நிலையாலும் முற்பட்ட செந்தமிழ், அதற்குப் பிற்பட்டதும் அதன் திரிபானதுமான
கொடுந்தமிழினின்று தோன்றியிருத்தல் முடியாதென்பது தேற்றம்.
செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ்; திரிபின்றேல்
கொடுந்தமிழில்லை. ஆகவே தமிழ்த் திரிபே திரவிடம்; திரிபின்றித் திரவிடமில்லை.
தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிட மொழிகளெல்லாம் திருந்திய வடிவில் பேசவும் எழுதவும் படின்,
தமிழேயன்றி அவ்வத் திரவிட மொழிகளாகாமை காண்க.
சிலர், உண்டை(உருண்டை), கொடு(கொண்டு) எனத் தமிழில் இருவகை வழக்கிலும் அருகி வழங்கும் ஐந்தாறு
சொற்களைக் கொண்டு, தமிழும் திரவிடம்போல் திரிபுடையதே என நாட்ட விரும்புகின்றனர். எவ்விதிக்கும்
விலக்குண்டாதலின், விலக்கைக்கொண்டு விதியை மறுக்க முடியாது. ஒரு பொருளின் பெரும்பான்மை யியல்பையே
அதன் உண்மை யியல்பாகக் கொள்ளல்வேண்டும். தமிழ் பெரும்பாலும் இயல்புடையதென் றும், திரவிடம்
பெரும்பாலும் திரிபுடையதென்றும் அறிதல்வேண்டும்.
|