|
தம
தமிழ் இயல்பு தனிப்பட்டது. இதனாலேயே, "தன்னே ரிலாத
தமிழ்" எனப்பெற்றது. ஆகையால் பிராகிருதத்தினின்று சமற்கிருதம் ஆக்கப் பெற்றாற்போல்,
கொடுந்தமிழாகிய திரவிடத்தினின்று செந்தமிழாகிய தமிழ் ஆக்கப்பெற்றது என்பது ஒருசிறிதும்
பொருந்தாது.
தமிழ் மிகத் திருந்தியதும் பண்பட்டதுமான மொழியாகும்.
"இலக்கண வரம்பிலா மொழி" என்று பரஞ்சோதி முனிவர் இழித்துக் கூறியவற்றுள் வடமொழியாகிய
சமற்கிருதமும் ஒன்று என்பதை மறந்து விடல் கூடாது. "தில்லைச்சிற் றம்பலத் தும்என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் டீந்தமிழ்" என்று மாணிக்கவாசகரே வியந்தும் நயந்தும்
கூறுவராயின், தமிழ் எத்துணை விழுமிய மொழியாகும்.
எண்ணுக்கு மெட்டாத் தொன்மைதொட்டுத் தமிழ் வழங்கிவரினும்,
இன்றும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் தோன்றும் இயல்பு நிலையிலுள்ளன; கொடுந்தமிழ்ச்
சொற்களோ பெரும்பாலும் வேறுபட்டும் வேரற்றும் உள்ளன.
ஆக, ஆகாது, ஆயிற்றேல், ஆம்(ஆகும்) என்ற சொற்கள்,
தெலுங்கில் முறையே கா, காது, அயித்தே, ஒளனு எனத் திரிந்துள்ளன. ராய் (அறை), லெய்(எழு),
லோ(உள்), லு(கள்), ரோலு(உரல்), ரா (வார்) முதலிய தெலுங்குச் சொற்களில் எங்ஙனம்
வேர்காண முடியும்? ஆக, உள் என்ற சொற்கள் திரிந்து, கா, லோ என்ற சொற்கள் தோன்றுமா? அல்லது,
கா, லோ என்ற சொற்கள் திரிந்து ஆக, உள் என்ற சொற்கள் தோன்றுமா? இயல்பிலிருந்து திரிபு
தோன்றியதா? திரிபிலிருந்து இயல்பு தோன்றியதா? இவற்றை யெல்லாம் ஆய்ந்து பாராது கல்லூரிகளிலும்
பல்கலைக்கழகங்களிலும் தலைமைத் தமிழ்ப் புலமை நடாத்தும் பெரும் புலவருங்கூடப் பிராகிருதத்திலிருந்து
சமற்கிருதம் தோன்றியவாறே, கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் தோன்றியிருத்தல் வேண்டுமென்ற
குருட்டுக் கொள்கை யுடையராயிருக்கின்றனர். இனிமேலாயினும், அவர் ஆய்ந்து உண்மை காண்பாராக!
திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், முந்தித் திரிந்ததும்
தலைமையானதும் தருக்குற்றதும் தமிழைப் பழிப்பதுமான தெலுங்கே இங்குப் பெரும்பாலும் எடுத்துக்காட்டப்பட்ட
தென்க.
- “செந்தமிழ்ச் செல்வி” செப்பிடெம்பர் 1948
|