New Page 1
தெய்வம் உண்மையின்மை, தெய்வத்தின்
தன்மை, தெய்வத் தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மை
யின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வு நிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர்
மதித்துக் கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப்படுவதாகும்.
தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற்
காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், மதமானது,
ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.
தெய்வம் உண்டென்று கொள்வது
போன்றே, இல்லை யென்று கொள்வதும் மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம்
இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப்பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப்
பற்பல திறத்தினவாயுள்ளன.
2. சமயம் என்னும் சொல் வரலாறு
மதம், சமயம் என்னும் இரு
சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள் நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது
இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது
சமயம். ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.
உத்தல் = பொருந்துதல். உத்தி (உ
+ தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர்
இணைதல்.
உத்தம் = பொருத்தம். உத்தம் -
வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.
உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல்,
போலுதல்.
உ - உம். உம்முதல் = பொருந்துதல்,
கூடுதல்.
எண்ணும்மை யிடைச்சொல்லானது
இதுவே.
உம் - அம் = பொருந்தும் நீர்.
நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப் பொருந்துதல் இருவகைத்து.
அம் - அமர். அமர்தல் =
பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.
அம் - அமை. அமைதல் = பொருந்துதல்,
அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்
|