பக்கம் எண் :

தமிழர் மதம் 57

ஆர

ஆரியர் தெய்வ வணக்க நிலை

    வேத ஆரியர் தெய்வ வழிபாடெல்லாம், கொலைவேள்விப் பல் சிறுதெய்வ வணக்கமே. அசுவமேதம் என்னும் குதிரைவேள்வி மிக அருவருப்பானது. தசரதன் குதிரை வேள்வியில், அவன் தலைமைத் தேவியான கோசலை, ஓர் இரா முழுதும் வேள்வி யாண்குதிரையைக் கட்டித் தழுவிக் கிடந்தாள் என்று, மார்க்க சகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னும் சுவடியிற் கூறப்பட்டிருத்தல் காண்க. 'பௌண்டர யாகம்' என்னும் வேள்வியோ, சொல்லவும் எழுதவும் ஒண்ணா இடக்கர் மிக்க தென்று சொல்லப்படுகின்றது.

    மாந்தனைக் காவு கொடுக்கும் நரமேதம் என்னும் வேள்வியும் இருந்த தென்பதற்கு, சுனசேபன் கதை மட்டுமன்றி,

    பாட்டு "அந்த நரமேத மக மியற்றுதற்கு" என்னும் பாரதக் கூற்றும்(இராகசூ. 14) சான்றாம். மாட்டிறைச்சி யுண்டு 'சோம பானம்' என்னும்  தேட்கடுப்பன்ன தேறலை வயிறாரப் பருகிவிட்டு, இருதிணையுயிர்களையும் இரக்கமின்றிக் காவு கொடுக்கும் சிறுதெய்வ வணக்கம், காளிக்கும் காட்டேறி தூர்த்தேறி முதலிய பேய்கட்கும், பூதங்கட்கும் காட்டு வாணரும் கல்லா மக்களும் கொடுத்து வந்து கடாவெட்டுக் கொடுமையினும், கொடியதேயாம்.

ஆரியர் மறுமைக் கொள்கை

    மக்கள் இறந்தபின், அவருயிரைத் தீயும் கூற்றுவனும் வேற்று லகிற்குக் கூட்டிச் செல்வர். நல்லோ ருயிர்கள் மக்கள் அளிக்கும் உணவால் அங்கு வாழ்ந்திருக்கும். அவை 'பித்ருயாணம்' (தென் புலத்தார் வழி) 'தேவயாணம்' (தேவர் வழி) என்னும் இருவழியால் நல்லுலகிற்குச் செல்லும். தென்புலத்தாருலகிற்கு அரசன் கூற்றுவன். அங்குச் செல்லா நல்லுயிர்கள் 'சுவர்லோகம்' என்னும் விண்ணு லகையடையும். தீவினையர் அவ் வீருலகத்திற்கும் செல்லாது நரகிற் சேர்வர்.

    குறிப்பு : கோவில் வழிபாடு, பெருந்தேவ மதம், கடவுட் சமயம், நாற்பொருள், வீடுபேறு என்பனபற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை.

2. ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள்

(1) தமிழத் தெய்வ வணக்கத்தை மேற்கொள்ளல்

    ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்ட மாய்க் காந்தார நாட்டு(ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற்குட்