பக்கம் எண் :

தமிழர் மதம் 9

அதற

(7) அறிவு வளர்ச்சி

    மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்றபின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது   அறிவு வளர்ச்சியாகும்.

    மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட் டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

    அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதுண் மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக் காரரின்  சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

    மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன.

4. மூவகை மதம்

    மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (1) சிறுதெய்வ வணக்கம் (2) பெருந்தேவ மதம், (3) கடவுள் சமயம் என மூவகைப்படும்.

    இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக்காலத்திலும் துன்பக் காலத்திலும். ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங் கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அவ்வவ் மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடுபெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

    சிறுதெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.

5. குமரிநாட்டு மதநிலை

    மேற்கூறிய மூவகை மதநிலையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர்