பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1131

யவ என்று மொழிபெயர்த்தான். அதுபின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழிற் சாவகம்என்னும் வடிவுகொண்டது. சாலித்தீவின் தலைநகர்சாலியூர்.

சாலித்தீவைப் பாண்டியன்கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்றுகுடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப்பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார்,பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி,செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டுவிளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னுமிடத்துள்ள மலையர், தம் முன்னோர்இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர்என்றும்; கெரினி (Gerini)என்னும் ஆசிரியர், அங்கு வழங்கும் மலையன் கோலன்(Maleon Kolan) என்னுங்குடிப்பெயரை, மலையர் சோழர் என்னும் தமிழரசர்குடிப்பெயர்களுடன் இணைத்துக் காட்டுகின்றனர்என்றும்; திருவிசயம் (ஸ்ரீ விஜய) என்னும் அரையத்தலைவனுக்குச் சுறவக் கொடியும் திருமாறவிசயோத்துங்கன் (ஸ்ரீமாற விஜயோத்துங்கன்)என்னும் பெயர் உண்டென்றும்; ரா. ராகவையங்கார்தாம் எழுதியுள்ள தமிழ் வரலாறு என்னும் நூலிற்கூறியுள்ளார் (பக்.338-9).

மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடியுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன்காவலுள்ள இடம் என்று பொருள்படும்.

தமிழர் படிப்படியாகப் பக்கத்துத்தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத்தெரிகின்றது. சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவுமதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra)என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo)என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறைமலையா (Malaya) என்றும்பெயர் பெற்றுள்ளன.

பொருநை (தாம்பரபரணி) என்பதுபாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பதுபொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன்முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore)என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால்ஏற்பட்டனவாகும். புரம் என்னும் ஈறு தமிழ்.


சோழர் வெற்றிச் செயல்கள்

"நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக" 

(புறம்.66)

என்று சோழன் கரிகாற் பெருவளத்தானைவெண்ணிக்குயத்தியார் பாடியிருப்பதால், அவன்முன்னோருள் ஒருவன் ஆழ்கடல் கடந்து மீண்டமைஅறியப்படும். வளிதொழிலாள்வ தென்பது, பருவக்காற்றறிந்து அதன் வாக்கிற் கலஞ்செலுத்துதல்.