"பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி." | (பு.வெ. 35) |
1
தனிநிலைக் காண்டம் 1. கற்காலம் (Stone Age) (தோரா. கி. மு. 5,00,000-50,000) முந்தியல் தமிழரான அநாகரிக மாந்தர் கல்லாற் பல்வேறு கருவிகளைச் செய்துகொண்ட காலம் கற்காலமாகும். அது பழங் கற்காலம், புதுக் கற்காலம் என இரு பிரிவினது. (1) பழங் கற்காலம் (Old Stone Age) (தோரா. கி. மு. 5,00,000-1,00,000) தமிழரின் முதற்கால முன்னோரான குமரிநாட்டு மாந்தர், பொன்னம் (metal) ஒன்றும் கண்டுபிடிக்கு முன், கில்லி (கல்லி), வெட்டி,குத்தி, கத்தி, உளி, சுத்தி (சுத்தியல்), சமட்டி (சம்மட்டி), குந்தம், கூந்தாலம், கோடரி, குத்துக் கோடரி முதலிய கருவிகளைக் கல்லால் முரட்டு வேலைப்பாடாகச் செய்து, பயன்படுத்தி வந்த காலம் பழங்கற்கால மாகும். அவர் வாழ்ந்த இடம் குமரிமலைத் தொடரின் அடிவாரமான குறிஞ்சிநிலம். அவர் செய்த தொழில் காய்கனி பறித்தல், கிழங்ககழ்தல், தேனெடுத்தல், வேட்டையாடல் என்பன. கிழங்கு தோண்டற்குக் கோணலில்லாத கொம்பையும் கூராகச் செதுக்கிய வன்குச்சையும்,வேட்டையாடற்குக் கல்லையும் குறுந்தடியையும் நெடுந்தடியையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும்.
|