மருவ லர்கொள
மன்பொரு ளற்றபன்
மரபி னாருளர்
மைந்திலர் வாயிரு
திருவி ழந்தபின்
றிருவெனுஞ் சொல்லையு
மொருவ நின்றவன்
தமிழ னொருவனே!
மிகமிகச்
சிறுபான்மையரான வடமொழியாளர் பன்னூற்றுக்கணக் கான தென்மொழிச் சொற்களை வடமொழியில்
திரித்துக்கொண்டது மன்றி, சொல்லாராய்ச்சியும் கலைமுறை யறிவும் மிக்க இவ் விருபதாம்
நூற்றாண் டிலும் அவற்றை வடசொற்களே யென்று வலிப்பதும், வடசொல் வடிவங் களையே தமிழ்நாட்டில்
வழங்க நெஞ்சழுத்தங் கொள்வதும் விந்தையினும் விந்தையே!
திருவென்னுஞ்
சொல் ஆரியரான வடமொழியாளர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே தமிழகத்தில் வழங்கிவந்த
தமிழ்ச்சொல் லென்பதற்கு, தொன்முது சார்பு நூலான தொல்காப்பியத்திலேயே அது ஆட்சி
பெற்றிருப்பதும் மேலை யாரியமொழிகளுள் ஒன்றிலேனும் அது எவ் வடிவினும் காணப்படாமையும், அதன்
வேர்ப்பொருள் வடமொழி யிலில்லாது தமிழிலேயே யிருப்பதும் போதிய சான்றுகளாம்.
திருவென்னுஞ்
சொல் தமிழில், 1. செல்வம், 2. திருமகள், 3. சிறப்பு, 4. அழகு, 5. காந்தி, 6. பொலிவு,
7. பேறு(பாக்கியம்), 8. தூய்மை அல்லது தெய்வத்தன்மை, 9 நல்வினை, 10, கணியன்(சோதிடங்
கூறுவோன்), 11. மாங்கலியம், 12. பழைய தலையணி வகை, 13. மகளிர் கொங்கைமேல் தோன்றும்
வீற்றுத்தெய்வம், 14. தூய்மை அல்லது பெருமை குறிக்கும் அடைமொழி முதலிய பல பொருள்களில்
தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது; அழகு என்னும் பொருளில் 'திருமை' எனப் பண்புப் பெயர்
விகுதி பெற்றும், செல்வம் பெருமை தூய்மை முதலிய பொருள்களில் 'திருவம்' என அம்மீறு பெற்றும்,
அக் குணங்களைக் குறித்துத் திருவன், திருவாளன், திருவாட்டி, திருவத்தவர், திருவினாள் என
உயர்திணைப் பெயராகியும் வழங்கியிருக்கின்றது. 'ஸ்ரீ' என்னும் அதன் வடசொல் வடிவமோ
கடைக்கழகத்திற்குப் பிற்காலத்ததாய், அதுவும் உரைநூல்களில், 1. செல்வம், 2. திருமகள், 3.
பேறு, 4. அழகு, 5. தூய்மை யடைமொழி