பக்கம் எண் :

'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?81

8

8

'மாணவன்' தென்சொல்லா?

வடசொல்லா?

    தமிழ் வடமொழிக்கு முந்தியமையாலும், ஆரியம் நாவலந் தேயத்திற் புகுமுன்னரே தமிழ் முழுவளர்ச்சியடைந்திருந்தமையாலும், இந்திய நாகரிகத்தின் சாரமான பகுதி தமிழ் நாகரிகமே யாதலாலும், தமிழுக் கின்றியமையாத பழஞ் சொற்களெல்லாம் தனித்தமிழே என்பது முழு வுறுதியான உண்மையாகும். ஆயினும், தமிழனின் தாழ்வுணர்ச்சியாலும், ஆராய்ச்சியின்மையாலும், ஆரிய ஏமாற்றத்தாலும் இன்னும் தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படவில்லை.

    தென்சொல்லா வடசொல்லா என்று ஐயுறப்படும் சொற்கட்கு, கீழ்க்காணும் நிலைமைகளிற் பல வொத்திருப்பின் தென்சொல்லென்றும், இராவிடின் வடசொல்லென்றும் துணியலாம்.

1. வேரும் வேர்ப்பொருளும் தமிழிலிருத்தல்.
   
2. கிளைச்சொற்களும் வழிச்சொற்களும், தமிழில் மட்டு மாயினும் தமிழிலும் திரவிட மொழிகளிலுமாயினும், சிறு பெருங் குலமாகவோ குடும்பமாகவோ இருத்தல்.
   
3. சங்கநூல்களில் ஆட்சிபெற்றிருத்தல், அல்லது தொன்று தொட்ட உலகவழக்கில் வழங்கிவரல்.
   
4. தமிழெழுத்துகளால் (தமிழொலிகளால்) அமைந்திருத்தல்.
   
5. நாட்டுப்புறத்துக் கல்லாமக்களால் பெரும்பான்மையாகவோ சிறப்பாகவோ வழங்கப்பெறல்.
   
6. (ஐயுறப்படும் சொல்லால்) குறிக்கப்பெறும் பொருள் அல்லது கருத்துத் தமிழ்நாட்டில் அல்லது தமிழர் உள்ளத் தில் தொன்றுதொட்டே (அஃதாவது ஆரியர் வருமுன் பிருந்தே) இருந்துவரல்.
   
7. சொல்வடிவு அல்லது சொல்லமைதி தமிழுக்கேற்றல்.

    இனி, மாணவன் என்னும் சொல்லுக்குச் சிறுவன் என்பதே வேர்ப் பொருளாம். மக்கள் ஆசிரியனிடத்துக் கற்கும் பருவம் சிறுபருவமாதலால், சிறுவனைக் குறிக்கும் சொல்லே கற்போனையும் குறித்தது. இன்றும், பிள்ளைகள் என்றும், பள்ளிப் பிள்ளைகள் என்றும் மாணவர் அழைக்கப் பெறுதல் காண்க.