அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஒளஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்றொரு நூற்பாவும் இருந்திருத்தல் வேண்டும். கன்று புல்லை ஒளவித் தின்கிறது. "கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும்"(நாலடி. 70) தெ. கவியு "வௌவிய வஞ்சி வலம்புனைய"(பு.வெ. 3 : 2) வாய் ஒன்றைக் கௌவும்போது மேல்வாயும் கீழ்வாயும் குறட்டின் ஈரலகுபோற் பற்றுவதால், கவ்வுதல்(அல்லது கௌவுதல்) என்னும் சொற்குக் குறடுபோற் கவைத்திருத்தல் என்னும் கருத்துத் தோன்றிற்று. வாயின் கவைத் தன்மையை, மாந்தன் வாயினும் விலங்கு மூஞ்சியும், விலங்கு மூஞ்சியினும் பறவை மூக்கும் தெளிவாய்க் காட்டும். அவ் என்னும் சொல்லினின்று, வாயினாற் பற்றுதலையும் மனத்தினாற் பற்றுதலையுங் குறிக்கும் சில சொற்கள் தோன்றியுள்ளன. அவக்கு என்பது விரைந்து கௌவுதலையும், அவக்காசி என்பது விரைந்து கௌவும் ஆசையையும் உணர்த்தும். அவ் - அவா - அவவு. அவா = ஆசை. அவவு = அவா. "அவவுக்கை விடுதலு முண்டு" (கலித். 14) அவவு - அவாவு. அவாவுதல் = விரும்புதல். அவாய்நிலை = ஒரு சொல் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய இன்னொரு சொல்லை அவாவி(வேண்டி) நிற்றல். அவாவு - ஆவு. ஆவுதல் = விரும்புதல். "செந்நெலங் கழனிச் செய்வேட் டாவிய மறையோன்" (உபதேசகா. சிவத்துரோ. 120) ஆவிச் சேர்ந்து கட்டினான் என்பது உலக வழக்கு. ஆவு - ஆவல். ம. ஆவல். கவ்வு என்னும் சொல்லினின்று, கௌவுதற் கருத்தை அடிப்படை யாகக் கொண்ட சில சொற்களும், கவைத்தற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல சொற்களும், கையினாற் பற்றுதலைக் குறிக்கும் சில சொற் களும், மனத்தால் அல்லது மனத்தைப் பற்றும் சில சொற்களும் தோன்றி யுள்ளன. கௌவுதல் "கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய்" (நாலடி. 322) கவுள் = கன்னம். "கண்ணீர் கவுளலைப்ப" (சீவக. 2050) |