கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும், கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல் இயல்பே. இனிக் கலி, களி, கத்து முதலிய சொற்களுள் ஒன்றன் அடியாகக் கொள்ளின், 'to roar', என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும். கயம் - கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை. கயம் - காயம் = கரிய வானம். "விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்"(தொல். எழுத்து. 305) கயம்-காசம்-ஆகாச (வ.), 'ஆ' ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்). பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற்களை வட சொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம். காயம்-காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம். காயாம்பூ வண்ணன் = கரிய திருமால். காயம்-காயல் = கரிய உப்பங்கழி. காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக. கள்-காள்-காளம் = கருமை, காளமேகம் = கருமேகம். காள்-காளி = கரிய மாரியம்மை. ஒ.நோ:மா-மாயோள் (காளி) = கரியாள். மாமை = கருமை. காளம்-காளான் = கரிய ஆம்பி. காள + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்). காள்-காளை = கரிய எருது, எருது. காள்-காழ், காழ்த்தல் = கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல், முதிர்தல், கடுத்தல், உறைத்தல். 'காழ்ப்பேறுதல்' என்னும் வழக்கை நோக்குக. காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு, உறைப்பு. காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி. காழ்-காழகம் = கருமை. காழ்-காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல், உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல்போற் சினத்தல். காய்-காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய்-காய்ச்சல். காய்த்தல் = வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, 'கையிற் காய்ப்புக் காய்த்தல்' முதலிய வழக்குகளை நோக்குக.) வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல். |