பக்கம் எண் :

சொல்வேர் காண்வழிகள் 65

11. சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல்

     உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப் போதல் (கூடாதல்,
தோலும் எலும்புமாதல், மிக மெலிதல்). இதை உடல் கெடுத்துப் போதல்
என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பிரித்திருப்பது தவறாம்.

     உடங்கு - உடக்கு = உடம்புக் கூடு.

12. பொருள்களின் சிறப்பியல்பறிதல்

     ஒவ்வொரு பொருளின் (பார்த்தமட்டிற் கண்ணைக் கவரும்)
சிறப்பியல்பையும் உற்றுநோக்கியே, அததற்குரிய பெயரை இட்டிருக்
கின்றனர் முன்னைத் தமிழர்.

     எ-கா : காகா(காக்கா) என்று கரைவது காகம்(காக்கை). மூன்று
அணிகளை (வரிகளை) முதுகில் உடையது அணில். இருமை (கருமை) யான
மாட்டினம் எருமை. வழுவழுவென்றிருக்கும் மரம் வாழை.

     முடிவேய்ந்த பேரரசன் வேந்தன். வேய்தல் = முடியணிதல்.
வேய்ந்தோன்-வேந்தன். கொன்றை வேய்ந்தானை(சிவனைக்) கொன்றை
வேந்தன் என்று கூறுதல் காண்க. சேர சோழ பாண்டிய முக்குடியரசர்க்கே
முடியணியும் உரிமை முதற்காலத்திலிருந்தது.

13. பொருள் வரிசையறிதல்

     எ-கா :அருகுதல் = சிறுத்தல், ஒடுங்குதல். அரு-அரை = சிறுத்த
            அல்லது ஒடுங்கிய இடை, உடம்பின் நடு, பாதி.
            கோல்-கால் = கம்பம், தூண், தூண்போல் உடம்பைத்
            தாங்கும் உறுப்பு,
            உடம்பின் காற்பகுதி, காற்பகுதி (நாலிலொன்று).

     உடம்பின் பாதியளவாயிருப்பது அரையென்றும், நாலிலொரு பகுதி
யாயிருப்பது காலென்றும், தலைகீழாய்ப் பொருட்கரணியங் காட்டுவது
உண்மைக்கு நேர்மாறாம்.

14. ஒப்புமையமைப்பு(Analogy) அறிதல்

     எ-கா:குழல் - குடல், புழல் - புடல் - புடலை - க. படல, தெ.
           பொட்ல, வ. பட்டோலிக்கா, கடை - கடலை, விடை -
           விடலை - L. vitula.

     மை - மயிர், தை - தயிர்; தைத்தல் குத்துதல். முட்குத்தினால் முள்
தைத்தது என்பர். பாலிற் பிரைமோர் ஊற்றுதலைப் பிரைகுத்துதல் என்பது
உலக வழக்கு. பிரை தைத்தது தயிர் - வ. ததி (dadhi), இ. தஹீ.

15. வரலாற்றறிவையும் ஞாலநூலறிவையும் துணைக்கோடல்

     எ-கா:

     பாண்டவர் தோன்று முன்னரே பாண்டியர் தென்னாட்டை
ஆண்டுவந்தனர். பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் திருநீராடத்