பக்கம் எண் :

66மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

தென்னாடு வந்து, சித்திராங்கதன் என்று பாரதங் கூறும் ஒரு பாண்டியன்
மகளை மணந்தான். ஆரியர் இந்தியாவிற்குள் அடி வைக்கு முன்னரே,
பாண்டியர் வரலாற்றிற் கெட்டாத தொன்மையிலிருந்து கணக்கில் காலம்
தென்றமிழ் நாட்டை ஆண்டு வந்திருக்கின்றனர். திருக்குறளுக்கு ஆரிய
அடிப்படையில் உரை வரைந்த பரிமேலழகரும், பழங்குடிக்குப் "படைப்புக்
காலந்தொட்டு மேம்பட்டுவரும் சேர சோழ பாண்டியர் குடிகள்" என்று
மூவேந்தர் குடிகளை எடுத்துக் காட்டினர். இங்ஙனமிருந்தும், பாண்டியன்
என்னும் பெயர் பாண்ட்ய(Pandya) என்னும் வடசொல்லினின்று
திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி நெஞ்சாரப்
பொய்க்கின்றது. இதை ஊழியிறுதிச் சூறாவளிபோற் சுழற்றி யெறிவது
குமரிக்கண்டத் தமிழக வரலாறே. பாண்டி = காளை, மறவன். பாண்டி -
பாண்டியன்.

     சாமை படைப்புக்காலந் தொட்டுத் தென்னாட்டில் விளைந்துவரும்
தொண்(ஒன்பான்) கூலங்களுள் ஒன்றாகும். இன்றும் அது நாட்டுப்புற
உழவர்க்கு உரிய ஒழுங்கான உணவு வகைகளுள் ஒன்றாக இருந்து
வருகின்றது. ஆயினும், அதன் பெயர் ச்யாமா என்னும் வடசொல்லின்
திரிபாக, மேற்குறித்த பொய்க்களஞ்சியம் துணிந்து கூறுகின்றது. இதனை
வெட்டி வீழ்ப்பது ஞால நூலறிவே.

     சாமைப் பயிர்போல் ஒரு புல்லும் உண்டு. அது சாமைப்புல்
எனப்படும். சாமை என்னும் தென்சொல்லையே வடமொழியாளர் ச்யாமா
என்று திரித்துத் தமிழரை ஏமாற்றிவருகின்றனர்.

16. இடுகுறி தமிழில் இல்லையென் றுணர்தல்

     தமிழ் தானே தோன்றிய இயன்மொழி யாதலின், அதிலுள்ள எல்லாச்
சொற்களும் கரணியக் குறிகளே. சிலவற்றின் வேர்ப்பொருள் பார்த்தமட்டில்
தெரியும்.

     எ-கா:சுடலை < சுடல் < சுடு < சுள்.

     சிலவற்றின் வேர்ப்பொருள் ஆழ்ந்து ஆய்ந்தாலன்றித் தோன்றா.

     எ-கா:வினை < விளை. இவ் வுண்மைகளையே,

     "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" (தொல். 640)

     "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா"(தொல். 877)

என்று தொல்காப்பியர் குறித்தார்.

     நன்னூலுரையாசிரியர் இடுகுறியாகக் காட்டியுள்ள தமிழ்ச்
சொற்களெல்லாம் கரணியக் குறிகளே. பலா = பருத்த பழத்தை யுடையது.
பனை = கூரிய பல்போன்ற கருக்குமட்டை யுள்ளது. பொன் = பொற்பு
அல்லது பொலிவுள்ளது. மரம் = மரத்தது அல்லது உணர்ச்சியற்றது
போன்றிருப்பது. மா = கொட்டைக்குள் வண்டுள்ளது.