பக்கம் எண் :

68மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

அதை மறைத்தற்குப் பல சொற்கட்குப் பொருந்தப் புகலலாகவும்
பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறியும், சிலவற்றை இடுகுறி
யென்று முத்திரையிட்டும் வருகின்றனர். இவற்றை மறுத்து உண்மை
கூறுபவர்க்குப் பதவி அல்லது அலுவல் போய்விடும் என்னும் அச்சம்
தமிழர் உள்ளத்திற் குடிகொண்டிருப்பதால், வடமொழியில் வழங்கும்
தமிழ்ச்சொற்கட்கு வேர்காணத் தனிமறம் வேண்டுவது ஒருதலை.

19. நடுநிலை

     "காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
     ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
     உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
     குற்றமுந் தோன்றாக் கெடும்."(அறநெறி. 22)

     கவி என்பது வடசொல். பா, செய்யுள் என்பனவே தென்சொல்.
ஆதலாற் கவிஞனைப் பாவலன் என்றும், கவியரங்கைச் செய்யுளரங்கு
அல்லது பாவரங்கு என்றுமே சொல்லுதல் வேண்டும்.

     கவிந்துகொள்வது கவி என்றும், தருவது தருமம் என்றும், நாயை
வைத்திருப்பவன் நாயன் என்றும், உள்தணமாயிருப்பது உட்டணம் என்றும்,
இரவுகசிதல் இரகசியம் என்றும், பெரிய வித்து என்று பொருள்படும்
வான்வித்து என்பது வித்துவான் என்று தலைமாறிய தென்றும், இவை
போன்று பிறவும் கூறுவதெல்லாம் அறிவு முறைப்பட்டன வல்லவென்று கூறி
விடுக்க.

20. பொறுமை

     சில சொற்கட்கு வேர்காட்டும் உறவுச் சொற்கள் இறந்துபட்டிருப்ப
தால், அவற்றின் வேர் காண்டற்கு நாட்பலவன்றி ஆண்டு பலவும் ஆகலாம்.
ஆதலால், சொல்லாராய்ச்சிக்கு மிகுந்த பொறுமையும் வேண்டும்.

     ஆண்டு பலவாகியும் வேர்காண வியலாது போகவும் நேரும்.
அதனால் உள்ளந் தளர்தல் கூடாது.

     நெறியறிந்து ஆர அமர ஆராயின், இற்றைத் தமிழ்ச்சொற்களுள்
நூற்றிற்கெழுபத்தைந்திற்கு வேர்காண வியலும். எனினும் இறைவன்
ஏற்பாட்டின்படியே ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு துறையில் ஆற்றலமையும்
என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.

     "வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
      தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
      வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
      எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது." (ஒளவையார்)

                            - "செந்தமிழ்ச் செல்வி" மார்ச்சு 1967