பக்கம் எண் :

மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள் 79

     தமிழரின் முன்னோர் குமரிநாட்டில் நண்ணிலக்கோட்டை அடுத்தே
வாழ்ந்தவர். நாள் முழுதும் வெயிலில் உழைப்பவர் கருத்தும், நிழலில்
வாழ்பவர் வெளுத்தும், இருப்பர். வெண் களமர் X கருங்களமர்,
வெள்ளாளர் X காராளர் என்னும் பெயரிணைகளை நோக்குக. உழுதுண்பவர்
வெயிலிலும், உழுவித்துண்போர் நிழலிலும் இன்றும் வாழ்தல் காண்க.

     இனி, உணவுச் சிறப்பினாலும் உண்ணா வறுமையாலும் வெளுத்தும்
கருத்தும் போவதும் உண்டு. வெள்ளொக்கல் X காரொக்கல் என்னும்
பெயரிணையை நோக்குக.

     தமிழர் வெப்பமிக்க குமரிநாட்டினின்றே மேனாடுகட்குச்
சென்றமையை, V.R. இராமச்சந்திர தீட்சிதரின் Origin and Spread of the
Tamils என்னும் மறுக்கொணா அரிய ஆராய்ச்சி வரலாற்று நூலை
நோக்கிக் காண்க.

     மாந்தன் முதற்பெற்றோர் நண்ணிலக்கோட்டை யடுத்த நாட்டிலேயே
வாழ்ந்திருத்தல் கூடும். இதற்குரிய சான்றுகளையெல்லாம் இங்குக் கூற
இடமின்மையால், இம்மட்டில் இக் கட்டுரை நிறுத்தப்பட்டுள்ளது.

     மேலைநாட்டு மொழியாராய்ச்சியாளர் என்னென்ன உண்மை
காண்பினும், அவையெல்லாம் குமரிநாட்டு மாந்தன் தோற்றத்திற்கோ
தமிழன் தோற்றத்திற்கோ முரணாக இருத்தல் முடியாதென்பதையும்,
மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றேயென்பதையும்,
இதனால் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்க.

                       - "செந்தமிழ்ச் செல்வி" அகுதோவர் 1980