பக்கம் எண் :

96மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

     சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில், வரச்சூலை, வரட்சி,
வரட்சுண்டி, வரட்சூலை, வரட்சொறி, வரட்டடைப்பான், வரட்டி, வரட்டுதல்,
வரட்டு, வரட்டுச் சோகை, வரட்டுப்பசு, வரள், வரள்வாயு என றகரம்
வரவேண்டிய சொற்களையெல்லாம் ஒழுங்காய் ரகரமிட்டுக் குறித்திருக்
கின்றனர். இவை சரியாமா? தமிழ்நாடு அடிமை நாடாதலின், தமிழைப்
பற்றிக் கேட்பார் கேள்வியில்லாமலும் எவரேனும் தப்பித் தவறிக் கேட்பின்
விடை விளக்கமில்லாமலும் இருக்கின்றது. இத்தகைய அகரமுதலிகளைப்
பின்பற்றாது, தூய கருநிறத்தைக் குறிக்கும் சொல்லெல்லாம் ரகரத்தைக்
கொண்டவையென்றும், சினம், கறை, முதிர்ச்சி முதலிய வழிப்பொருளைக்
குறிப்பனவெல்லாம் றகரத்தைக் கொண்டவையென்றும், தெரிந்துகொள்க.
மரவயிரம் கருத்தும் சிவந்தும் இருக்குமாதலால், கருத்ததைக் கருப்பு
என்றும் சிவந்ததைச் சேகு என்றும் சொல்லல் வேண்டும்.

     இனி, கருப்பு என்னும் சொல் பஞ்சம் என்னும் பொருட்கேயுரியதாகச்
சிலர் கருதுவர். கருப்பு இருளையும், இருள் துன்பத்தையும் நாட்டுத்
துன்பங்களுட் கொடிய பஞ்சத்தையும் குறிக்கும். அதனாலேயே,
"அத்தமிக்கும் போதில்" என்னும் காளமேகம் பாட்டுச் சொற்றொடர்க்கு,
பஞ்சகாலத்தில் என்றும் பொருள் கூறப்படும். இங்ஙனம் அணிவகைப்
பொருள்கள் எல்லா நிறப் பெயர்கட்குமுண்டு.

     எ-கா :

     கருப்பு = பேய், வயிரம், சாராயம்.

     வெள்ளை = வெளுத்த ஆடை, சுண்ணாம்பு, வெள்ளாடு, வெண்பா,
     கள்ளமின்மை, தெளிவு.

     பச்சை = இழவு வீட்டிற் கொடுக்கும் பயறு, இடக்கர், பச்சை மையிற்
     குத்திய தொய்யில், மொழியின் இயல்பு நிலை.

     சிவப்பு = மாணிக்கம் (சிவப்புக்கல்), சினம்,

     மஞ்சள் = காமாலை.

     இனி, பொதுமக்கள் என்னும் சொல் புதியதென்றும், பொருந்தாத
தென்றும், சில புலவர் கருதுகின்றனர்.

     10.ஆம் நூற்றாண்டினதான பழமொழியில்,

     "புலமிக் கவரைப் புலமை தெரிதல்

     புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க

     பூம்புன லூர! பொதுமக்கட் காகாதே

     பாம்பறியும் பாம்பின கால்"

என்னும் 7ஆம் செய்யுளில் பொதுமக்கள் என்னும் சொல் வந்திருத்தல்
காண்க.

     இனி, இக்கால அகரமுதலிகளில் (அகராதிகளில்) சில சொற்கட்குத்
தவறான பொருள் குறிக்கப்பட்டிருப்பதால் அவற்றை ஆய்ந்து