பக்கம் எண் :

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி 101

-101-

 

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

    அதுவே தமிழ் நெடுங்கணக்குத் தோற்றமென்றும், பர்.தெ.பொ.மீ. தம் நுண்மாண் நுழைபுலத்தாற் கண்டிருப்பது, ஆகா! எத்துணை அருமையான உய்த்துணர்வு! இது விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் வேறெவர்க்கும் தோன்றியிருக்கக் கூடாத விழுப்புல மணிக்கருத்தே! ஒரு கல்லறைத் தோட்ட வாயிலின் மேல் ''நாய்கள் புகற்க!'' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பலகையைக் கண்டவுடன், ஒரு நாய் புகாது நின்றுவிட்ட தென்று கூறும் பிக்குவிக்குத் தாள்களை (Pickwick papers) விட இது நகைச் சுவை விஞ்சியதே! இதனால், திக்கென்சை (Dickens)  வென்றுவிட்டார் பர். தெ. பொ. மீ. யார் என்றே சொல்லலாம்.

    அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தைத் தமிழ்ப் பொதுமக்கள் கற்றபின், தொல்காப்பியம் தோன்றிற்றென்று, தமிழை இழித்தும் பழித்தும் புறக்கணிக்க வேண்டுமென்னுங் கருத்திருந்தாலன்றி, தொல்காப்பியங் கற்ற எவருஞ் சொல்லத் துணியார்.

    ''மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்'' (எழுத். 15)
என்னும் நூற்பாவுக்குப் பின்,

    ''எகர ஒகரத் தியற்கையும் அற்றே'' (எழுத் 16)
என்றுள்ள நூற்பா தொல்காப்பியப் படுகுழிகளுள் ஒன்றாகும். இது  பின்னர் வேறொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்படும்.

    தமிழ் நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தி னின்று பொதுமக்கள் தோற்றுவித்ததென்னும் முழுத் தவறான  கருத்தை அடிப்படையாக வைத்தே, பர். தெ.பொ.மீ. மேற்கொண்டு ஆராய்ந்து செல்கின்றார். ''முதற் கோணல் முற்றும் கோணல்'' என்றவாறு, அவர் ஆராய்ச்சி அடிப்படைத் தவற்றினால் முற்றுந் தவறாக முடிகின்றது.

    உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகை யெழுத்து வேறுபாடும், அவற்றுக்கு வரிவடிவ வேறுபாடும் உள்ள நெடுங்கணக்கு முறை உலகில் முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்றென்பது,  முன்னரே கூறப்பட்டது. மெய்க்குத் தனிவடிவில்லாது தோன்றிய குகைக் கல்வெட்டுப் பிராமி யெழுத்தை அடிப்படையாகக் கொண்டதனால், தமிழ் மெய்யெழுத்திற்கும் புள்ளிக்குறி கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிற்றென்பது, உண்மைக்கு முற்றும்  மாறாகும்.

    ஒரு நாட்டு மக்களை நல்வழிப்படுத்த அந் நாட்டு அரசனுக்கே இயலுமாதலால், அசோகன் தன் ஆட்சியெல்லைக்குள் பொறித்த பாறை, குகை, கம்பம் ஆகிய மூவிடக் கல்வெட்டுகளிலும், தன்  அதிகாரத்துக் குட்பட்டவர்க்குக் கட்டளையாகவும் உட்படாத எல்லைப்புற நாட்டரசர்க்கு நட்பு முறைப்பட்ட நல்லுரையாகவும், துன்புறுத்தாமையை அடிப்படை யாகக் கொண்ட அன்பு நெறியீடுகளைக் குறித்தது, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசரை நோக்கியதேயன்றிப் பொதுமக்களை