பக்கம் எண் :

114மறுப்புரை மாண்பு

-114-

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

    ஒலிப்புமுறைக்கு முன் நிகழ்வதை வண்ணிக்கவில்லை யென்றும் கூறுகின்றது. ஒலிப்புமுறைக்கு முற்பட்ட நிலைகள் பற்றிய பல செய்திகள் அந்தணர் மறையில் வண்ணிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகின்றார். சமற்கிருத ஆசிரியர் கொள்கையை அவர் அறிந்திருந்ததை இது தெளிவாகக் குறிக்கின்றது.'

விளக்கம்

    'இது பிறன்கோட் கூறல் என்னும் உத்திக்கு இனம். என்னை? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி, மாத்திரை கூட்டிக்கோடலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் வேதத்திற்கு உளதென்று இவ் வாசிரியர் கூறி, அவர் மதம்பற்றி அவர் கொள்வதோர் பயன் இன்றென்ற லின்,' என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, இந் நூற்பாவின் தேவை யின்மையையும் பயனின்மையையுமே குறிக்கின்றது.

    'உந்தி முதலா முந்துவளி தோன்றித்
    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
    பல்லும் இதழும் நாவும் மூக்கும்
    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
    உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
    எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
    பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
    திறப்படத் தெரியுங் காட்சி யான'                     (தொல். எழுத்து. 83)

என்று பிறப்பியல் முதல் நூற்பாவிற் கூறிய முகவுரையே, ஒலிப்புமுறைக்கு முற்பட்ட நிகழ்ச்சியைத் தெரிந்துகொள்ளப் போதுமானதாம்.

    நுண்ணொலி (சூக்குமை), பருவொலி (பைசந்தி) இடையொலி (மத்திமை), எழுத்தொலி (வைகரி) என்று, ஆரியச் சிவக்கொண்முடிபு கூறும் நால்வகை யொலியுள், முதல் மூன்றும் அறிவியலோடு பட்டவையல்ல.

    தனியெடுப்பொலியும் மூச்சொலியும் தமிழுக்கின்மையின், அவற்றின் பிறப்பைப் பற்றியும் தமிழிலக்கணத்திற் கூறவேண்டிய தில்லை.

    'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
    கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
    காமக் கூட்டம் காணுங் காலை
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
    துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே'           (தொல். களவு. 1)

    என்பது போன்ற பல பிற நூற்பாக்கள் தொல்காப்பியரின் சமற்கிருத அறிவைத் தெரிவிக்கப் போதுமானவை.

    ஆதலால், பிறப்பியல் இறுதி நூற்பா ''நின்று பயனின்மை'' என்னும் குற்றத்தின் பாற்பட்டதே.
                              - 'செந்தமிழ்ச் செல்வி' பெப்பிரவரி சூலை 1980