பக்கம் எண் :

2மறுப்புரை மாண்பு

-2-
 
1. குரலே சட்சம்
 

    (2) மத்தளத்திற்கு வலக்கண் குரலென்றல்

    சிந்தாமணியில், 675ஆம் செய்யுளுரையில்,

    "இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்
     நடப்பது தோலியற் கருவி யாகும்"

என்பது மேற்கோள். தண்ணுமை, முழவு, மத்தளம், மிருதங்கம் எனப் பலவாறு சொல்லப்படும் ஓரினத் தோற்கருவிகளில், தொன்றுதொட்டு வலக்கண்ணே சட்சமா யிருந்துவருகின்றது.
 

    (3) குரலை முதற்றான மென்றல்

    11ஆம் புறப்பாட்டில், ''குரல் புணர்சீர்'' என்னுந் தொடருக்கு "முதற் றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டை" என்பது பழையவுரை.

    (4) கேள்விச் சுரம்(சுருதி) இயல்பாய்ச் சட்சமாயிருத்தல்

   எவர் பாடினும் இயல்பாய்ப் பாடும்போது மத்திமமன்றிச் சட்சமே சுருதியாயிருத்தலின், அதனையேமுதற் சுரமாக நம் முன்னோருங் கொண்டிருக்க வேண்டும்.

    (5) குரல் என்னுஞ் சொல் தொண்டையையும் அதிற் பிறக்கும் ஓசையையுங் குறித்தல்

    குல் > குர் > குரல். குலவு = வளை. L. curvus, E. curve. குரவை = வட்டமாக நின்று ஆடுங் கூத்து. E.,L. chorus, Gk. choros, orig . a dance in a ring. குரல் = வளைந்த துளை, துளையுள்ள தொண்டை, தொண்டையிற் பிறக்கும் ஓசை. ஒ.நோ: வளை = குழி. தொண்டை = தொளையுள்ளது. (தொள் + தை).

    Dan. kroc, E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. kragen, Scot. craig, the neck, E. crop, the craw of a bird, A.S. crop, Dut. crop, a birdழுs crop.

    எல்லா ஓசையுங் குரலெனப்படுமேனும், இயல்பான கேள்வி யிசையே (சுருதி), குரலென்னுந் தொண்டைப் பெயராற் கூறப்படுதற் கேற்றல் காண்க.

    (6) குரலே சட்சமாக மாபெரும் புலவர் ஆபிரகாம் பண்டிதர் கொண்டமை

    இசைத்தமிழ்க் கடலை (சாகரத்தை)த் தனிப்படக் கடைந்து ''கருணாமிர்தம்'' என்னும் அரிய அமுதையெடுத்து நாம் உண்ண வைத்த காலஞ்சென்ற இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் இசை யாராய்ச்சி நூலில், இரண்டொரு சிறு சறுக்கல்களிருப்பதாகத் தெரியினும், குரலிசையைப்பற்றிய கொள்கை வலியுறுவதாகவே தோன்றுகின்றது.