பக்கம் எண் :

96ஊரும் பேரும்

முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள
முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி
நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும் அக்குலத்தாரது பெருமையைக்
காட்டுவனவாகும்.
 

முனையர்

    முனையர் என்ற குலத்தாரும் பழந் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள்.
அவர் சிறந்து வாழ்ந்த இம் முனைப்பாடி என்று பெயர் பெற்றது.9
அவ்வூரைத் தன் அகத்தே கொண்ட நாடு திருமுனைப்பாடி நாடு. தேவாரம்
பாடிய மூவரில் இருவரை ஈந்தது அந் நாடே. சுந்தரர் வாழ்ந்த காலத்தில்
நரசிங்க முனையர் என்னும் சிற்றரசன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு
வந்ததாகத் திருத் தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது.10
 

பாணர்

    பாணர் என்றும், வாணரென்றும் பெயர் பெற்ற குடியினர்
பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலம் ஆண்டு வந்தனர்.
முனையர் பெயரால் முனைப்பாடி எழுந்தாற் போன்று, பாணர் பெயரால்
பெரும் பாணப்பாடி உண்டாயிற்று. அதன் தலை நகரம் நிவா நதிக்
கரையிலுள்ள திருவல்லம் என்னும் தீக்காலி வல்லம் ஆகும்.வாணபுரம் என்ற
மறு பெயரும் அதற்குண்டு. அந் நகரின் அருகே பாண மன்னர் வெட்டிய
ஏரியும், அதைச் சார்ந்த ஊரும் வாண சமுத்திரம் என்று பெற்றன. இன்னும்,
வட ஆர்க்காட்டில் சோழிங்கருக்கு அண்மையிலுள்ள பாணவரம் என்ற
ஊரும் பாணர் குடியை நினைவூட்டுகின்றது.11