தெள் - தெரி - தேர் - தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல். தேறு = நீரைத் தெளிவிக்கும் தேற்றாங்கொட்டை. “தேறுபடு சின்னீர் போல்” (மணிமே. 23:142) தேறு - தேற்று = தெளிவு, தெளிவிக்கை, தேற்றாங்கொட்டை (பிங்). “தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவ தென்ன” (ஞனவா. மாமவியா. 3) தேற்று - தேற்றா (தேற்றாங்கொட்டை, அக்கொட்டை மரம்). “தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல” (கலித். 142, உரை) xiii. கள் தெளிவு கள்ளும் தேனும் பொதுவாக அரித்தும் வடிகட்டியும் தெளிவானதாக எடுக்கப்பெறுவதால், தெளிவு என்னும் சொல் அவ்விரண்டையும் ஆகுபெயராய் உணர்த்திற்று. இனிமையும் வெறிவிளைப்பும் கள்ளுக்குந் தேனுக்கும் பொது வியல்பாதலால், கள் தேன் மது மட்டு முதலிய பெயர்கள் அவ் விரண்டையும் பொதுப்படக் குறிக்கும். இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் எனக் கள் இருவகைப்படும். துல் - (தெல்) - தென் = (தெளிவு, கள்) இனிமை. “தென்னிசை பாடும் பாணன்” (திருவாலவா. 56:7) தென் - தேன் = தெளிவு, கள், மது. தேன் - தேம் - தீம் - தீவு = இனிமை. தேன் - தேனி. தேனித்தல் = இனித்தல். தீவிய = இனிமையான. தீம் - (தி) - தித்தி. துள் - தெள் - தெளிவு = பதநீர், கருப்பஞ்சாறு. தேறு - தேறல் = தெளிந்த கள், தேன். |