பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(1) சுட்டொலிகள்

முந்தியல் மாந்தர், முன்னிலைக்கும் அண்மைக்குமன்றிப் பயன் படாமையும் தெளிவின்மையும் சில கருத்தறிவித்தற் கியலாமையும் ஆகிய முக்குறைகள் சைகைமுறைக் கிருத்தலைக் கண்டபின், அண்மை சேய்மையாகிய இருமைக்கும் பயன்படுமாறு அறுவகை ஒலிகளைக் கருத்தறிவிக்கும் வாயிலாகக் கையாண்டு வந்தனர். அவற்றுள் சுட்டுக் கருத்தைத் தெரிவித்தற்குக் கையாளப்பட்டவை ஆ(அ), ஈ(இ), ஊ(உ) என்பன. இம் மூன்றையும், முறையே சேய்மைச் சுட்டாகவும், அண்மைச் சுட்டாகவும், முன்மைச் சுட்டாகவும் ஆண்டு வந்தனர்.

முதற்காலத்தில் சைகைகளே பெரும்பாலும் கருத்தறிவிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டமையின், பின்னர் அவற்றிற்குப் பதிலாக ஒலிகளைக் கையாண்டபோதும், அவற்றையும் ஒருவகைச் சைகைகளாகவே கருதிவந்தனர். உண்மையில், ஒப்பொலிகளும் வாய்ச்செய்கை யொலிகளும் ஒலிச்சைகைகள் (Sound-gestures) என்னத் தக்கனவே. ஒரு காக்கையின் வடிவைக் கைச்சைகையால் நடித்துக் காட்டுவது போன்றதே, அதன் குரலைக் காக்கா வென்று ஒலிச்சைகையால் நடித்துக் காட்டுவதும். ஒருவனுடைய உடல் நிலையை அல்லது உளநிலையை அதற்குரிய உணர்வொலிகளால் இன்னொருவன் நடித்துக் காட்ட முடியுமாதலின். உணர்வொலிகளும் ஒலிச்சைகைகளாகப் பயன் படுத்தக் கூடியவையே.

சுட்டொலிகளும் முதலாவது வாய்ச்சைகை யொலிகளாகவே பிறப்பிக்கப்பட்டன. வாய்ச்செய்கை யொலிகட்கும் இவற்றிற்கும் வேறுபா டென்னையெனின்; அவை ஓரிடத்தையுஞ் சுட்டாது சில வாய் வினையைச் சுட்ட, இவை எவ்வினையையுஞ் சுட்டாது மூவிடத்தையும் அவற்றிலுள்ள பொருளையும் சுட்டுவதே.

சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களையும் முறையே சுட்டக்கூடிய ஒலிகள் ஆ, ஈ, ஊ என்னும் மூன்றாய்த்தான் இருக்க முடியும். வாயை ஆவென்று விரிவாகத் திறந்து சேய்மையைச் சுட்டும்போது ஆகார வொலியும், ஈயென்று பின்னோக்கி யிழுத்துச் சேய்மைக்குப் பின்மையாகிய அண்மையைச் சுட்டும்போது ஈகார வொலியும், ஊவென்று முன்னோக்கிக் குவித்து முன்மையைச் சுட்டும் போது ஊகாரவொலியும், பிறத்தல் காண்க. நெடிலின் குறுக்கம்