பக்கம் எண் :

59

ஒதுங்கவைத்தல் = வழியிலும் அறை நடுவிலும் உள்ளவற்றை ஒருபுறமாகத் தள்ளிவைத்தல்.

ஒதுங்கு-ஒதுக்கு-ஒதுக்கம்.

கொழி-கழி, கழிதல் = நீங்குதல். கழித்தல்=நீக்குதல். ஒரு தொகையினின்று இன்னொரு தொகையை நீக்குதல்போற் குறைத்தல்.

(துள்)-தள். தள்ளுதல்=நீக்குதல்.

துர-துற, துறத்தல்=நீக்குதல். துற-துறவு-துறவி=பற்று நீக்கியவன்.

துற-துறக்கம்-துறவாற் பெறும் வீடு.

ஒ.நோ: விடு-வீடு, = பற்று விடுகையாற் பெறும் பேரின்பம்.

துறக்கம் என்னும் சொல் முதலாவது வீட்டையே குறித்தது; பின், அதைப்போன்றே விண்ணிலுள்ளதும் இன்பந்துய்க்கப் பெறுவதுமான (அல்லது அங்ஙனம் உள்ளதும் பெறுவதுமாகக்கருதப்படுவதான) தேவருலகத்தைக் குறித்தது. ஸ்வர்க்கம் என்னும் வடசொல் சுவர் (உயரத்திலுள்ளது) என்னும் பகுதியடியாகப் பிறந்திருப்பதால், அதை இதனொடு மயக்குவது சரியன்று. மேலேழுலகங்களுள் சுவர்லோகம் என்பதொன்றாகக் கூறப்படுதல் காண்க. சுவர் என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளை மேற்செலவியலில் ‘உயர்தற்’ பகுதியிற் காண்க.

தூர்த்தல் = குப்பை கூளத்தைக் கூட்டித் தள்ளுதல்.

நுதுத்தல் = நீக்குதல், அழித்தல், அவித்தல்.

“இன்னல் நுதுக்கும் தண்கவிகை வள்ளல்”                (விநாயக பு. 46, 4.)

“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற்கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.”                                  (குறள். 1148)

(நூ)-நீ, நீத்தல்=நீக்குதல். நீத்தார்=துறந்தார்.

(நூங்கு)-நீங்கு. நூக்கு-நீக்கு.

(3) துள்ளுதல்

துள்ளுதலாவது குதித்தல். அது முன்னோக்கித் துள்ளுதலும் மேனோக்கித் துள்ளுதலும் என இருவகைத்து. முன்னது ஈண்டும் பின்னது மேற்செலவியலிலும் கூறப்படும். மேனோக்கும்போது மேற்றிசையும் முன்றிசையாகி விடுதலால், அதுவும் முன்றிசையின் பாற்பட்டதே.