பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

அண்டு - அண்டை = முட்டு.

அண்டை (அண்டக்) கொடுத்தல் = முட்டுக் கொடுத்தல்.

பொது - ஒப்பு, பொருத்தம். பொது - (போது) - போதிகை = தூண்மேல் வைக்குந் தாங்கு கட்டை.

முள் - முட்டு.

முள் - முண்டு - மண்டு. மண்டுதல் = தாங்குதல்.

மண்டுகால் = முட்டுக்கால்.

iii. ஒலித்தல்

உயிரிகளின் வாயொலிகளல்லாத மற்ற வொலிகளெல்லாம், பொருள்கள் ஒன்றையொன்று தொடுவதினாலேயே அல்லது தாக்குவதினாலேயே உண்டாகின்றன வென்று முன்னைத் தமிழர் அறிந்து, தொடுவதையும் தாக்குவதையும் குறிக்குஞ் சொற்களினின்று ஒலி பற்றிய சொற்களை அமைத்துக்கொண்டனர்.

உயிரிகளின் வாயொலிகளும், எழுத்தொலிகளாயின், அவற்றின் உடம்புள்ளிருந் தெழுப்பப்படும் காற்றானது, மிடறும்மூக்கும் போன்ற உறுப்பிடங்களையும், அண்ணமும் பல்லும் போன்ற உறுப்புகளையும், தாக்குவதினாலேயே உண்டாகின்றனவென் றறிந்திருந்தனர் என்பது;

     “உந்தி முதலா முந்துவளி தோன்றித்
      தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
 பல்லும் இதழும் நாவும் மூக்கும்
      அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
      உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
      எல்லா எழுத்துஞ் சொல்லுங் காலை”                             (83)

என்னுந் தொல்காப்பிய நூற்பாவால் ஊகிக்கப்படும்.

உல் - உலம்பு. உலம்புதல் = அலப்புதல்.

உலம்பு - அலம்பு. அலம்புதல் = ஒலித்தல்.

உல் - ஒல் (ஒல்லெனல்) =ஒலிக்குறிப்பு.

ஒல் - ஒலி. ஒல் - ஓல் = ஒலி, தாலாட்டு. ஓலாட்டு= தாலாட்டு.

ஓல் - ஓலம் = ஒலி, ஓசை, கூவிளி.

குல் - குலை - குரை = ஒலி, ஆரவாரம்.

“நுரைத்தலைக் குரைப்புனல்”                                     (பொருந. 240)