பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

viii. மணத்தல் (வாசனை வீசுதல்)

ஒரு பொருளின் நாற்றம் அதனை யடுத்த காற்றொடும் பிற பொருளொடும் கலத்தலால், அது மணம் என்னப்பட்டது.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுதல் காண்க.

குரு = மணம்.

“குரூஉப்புகை” = மணமுள்ள புகை (திவா.).

குள் - குரு. குருத்தல் = கலத்தல், தொகுதல். (குருவி) - கருவி = தொகுதி.

“கருவி தொகுதி்”                                            (தொல். உரி. 56)

“கருவி வானம்”                                            (பெரும்பாண். 24)

“கருவி வானம் என்புழிக் கருவி மின்னுமுழக்கு
முதலாயவற்றது தொகுதி”

என்று சேனாவரையர் கூறியிருப்பது பொருந்தாது.

“விலங்கிலை யெஃகின் மின்மயங்கு கருவிய”                      (குறிஞ்சிப். 53)

என்றவிடத்தும்,

“வேல்போல மின்னு மயங்குகின்ற தொகுதிகளையுடையவாய்                                         (நச். உரை)

என்றே பொருள்படும்

கும் - கம் - கம - கமழ். கும்முதல் = கலத்தல், கூடுதல். குமு குமுத்தல் = மணம் வீசுதல்.

“பசுமஞ்சள் குமுகுமுச்சு”                                       (அழகர்கல. 10)

குமுகுமு - கமகம.

கம் என்று வாசனை அடிக்கிறது, கமகமவென்று கமழ்கிறது என்னும் வழக்குகளைக் காண்க.

குள் - கள் - (கடு) - கடி = வாசனை.

முள் - (மள்) - (மண்) - மணம் = வாசனை. மணத்தல் = கலத்தல்.

முள் - முரு - முருகு = வாசனை.

முரு - மரு = வாசனை. மருவுதல் = கலத்தல்.