vi. பருமை திரண்ட பொருள் பருத்திருக்கும். (உரு) - இரு - இருமை = பருமை. இரு - இறு - இறும்பு = மிகப் பெரியது, வியக்கத் தக்கது. உறு = பெரிய. உறுமை = பருமை. குரு - குரை = பருமை. குரு - கரு - கருமை = பருமை. குள் - கல் - கடு - கடா = பருமையானது, பருமையான ஆண் விலங்கு. கடாநாரத்தை = பெருநாரத்தை. கள் - (கய்) - கயம் = பருமை. கள் - (சொள்) - சொண்டு = தடித்த உதடு. துள் - தூண் - தூணி. தூணித்தல் = பருத்தல். துள் - (துடம்) - தடம் = பருமை. தட - தடா - தடவு. தடா = பெரும்பானை. துள் - தொள் - தொட்ட = பெரிய. (தும்) - திம் - திம்மன் = பருத்தவன், பருத்த ஆண்குரங்கு. (நுள்) - நள் - நளி = பருமை. “தடவுங் கயவும் நளியும் பெருமை” (தொல். உரி. 22) புல் - பல் - பலா = பரும் பழமரம். பலா - பலவு. பல் - பன் - பனை = பருங்கொட்டை மரம், அல்லது புல் வகையில் தினை என்பதனொடு எதுகையாகவுள்ள பெயரைக் கொண்ட பெருமரம். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்" என்று கபிலரும், “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார்" (குறள். 104) என்று வள்ளுவரும் கூறியிருத்தல் காண்க. பல் - பரு - பருமம் - பருமன். பரு - பருமை.. பரு - பெரு - பெருகு - பெருக்கு - பெருக்கம். பெருக்கு - பெருக்கல். |