ஐயன் என்பது சிவனைக் குறித்தல் தேற்றம். முழுமுதற்றெய்வம் பெருந்தெய்வம், சிறுதெய்வம் எனத் தெய்வம் முத்திறப்படுதலால், பிற்காலத்தில் சிவன் மகனாகக் கூறப்பெற்ற வணிகத் தெய்வமான சாத்தன், ஐயன் என்றும் ஐயனார் என்றும் ஆண்பால் வடிவிலும் உயர்வுப் பன்மை வடிவிலும் குறிக்கப்பெறுவன். இங்ஙனம், ஐயன் என்னும் சொல், பல்வேறு பொருள் குறித்துத் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் திரிந்தும் திரியாதும் வழங்கி யிருப்பவும், அணுவளவும் ஆரியத் தொடர்பற்ற பறையருள்ளிட்ட சில தமிழ்ப் பழங்குடிகள் ஐயன் என்னும் சொல்லையே தந்தை பெயராகக் கொண்டிருப்பவும்; வழக்கிற்கும் வரலாற்றிற்கும் மொழி நூற்கும் முற்றும் மாறாக, ஆரியன் என்னும் வருணப் பெயரின் சிதைவே ஐயன் எனும் தமிழ்ச்சொல் என, ஓரிரு தனிப்பட்டவர் நூலிற் கூறியிருப்பதுடன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிலுங் குறித்திருப்பது, மிகமிக வருந்தத்தக்கதொன்றாம். பெருமைக் கருத்து திரட்சிக் கருத்தின் வழிப்பட்ட பருமைக் கருத்தினின்றே தோன்றியிருப்பதால், நெருக்கமும் செறிவும் புணர்ப்பும் வன்மையும் குறிக்கும் அள் என்னும் அடிச்சொல்லினின்று, முற்கூறிய முறைப்படி, ஐ என்னும் சொல்லும் அதன்வழி ஐயன் ஐயை முதலிய சொற்களும் திரிந்திருப்பது, இயற்கைக்கும் ஏரணத்திற்கும் ஏற்றதே. ஐயன் என்னுஞ் சொற்கு மூலம் ‘ஐ’ யாதலால், அது ‘ஆர்ய’ என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையையும் கண்டுகொள்க. viii. திண்மை பல அணுக்கள் அல்லது பொருள்கள் மிக நெருங்கிச் சேர்வதால் திண்மை உண்டாகும். உறு - உற - உறப்பு. உற - உறை. உறைதல் = கட்டியாதல். உறு - இறு - இறுகு - இறுக்கு - இறுக்கம். இறுக்குதல் = இறுகுமாறு அமுக்கிக் காட்டுதல். குள் - கள் - கட்டு - கட்டி = இறுகியது. கட்டி - கெட்டி. கள் - காள் - காழ் - காய். காழ்ப்பு = வயிரம். காய்த்தல் = உழைப் பால் கை இறுகுதல், பிஞ்சு முதிர்ந்து இறுகுதல், காய் காய்த்தல். |